Showing posts with label என்ற ஒன்று. Show all posts
Showing posts with label என்ற ஒன்று. Show all posts

Tuesday, September 3, 2013

நான் இல்லாமல் என் வாழ்க்கை

நான் இல்லாமலே
என் வாழ்க்கை
எதேச்சையில்
அருத்திரண்டது

வடிவ விளிம்புகளைக்
கற்பிக்க
நான் இல்லாததால்
நீல வியாபகம் கொண்டது
எதைத் துறந்தோம் என்று
அறிய வேண்டாத
நிம்மதியில் திளைத்தது

உணர்வுகளின்
பொது ரீங்காரம் மட்டும்
தொடர
நிழல் வீழ்த்தாமல்
நடமாடியது
கூரைகளுக்கு மேலே
தன்மைகளின் எதிர்ப்பை
அலட்சியம் செய்து
அசைவு தெரியாமல்
பறந்து திரிந்தது
பூமியைத்   துளைத்து
மறுபுறம் வெளிவந்தது

பிம்பங்களின் துரத்தலுக்கு
அகப்படாமல்
நுட்பம் எதுவுமற்ற
சூன்யத்தை அளைந்தது

மரணப் பாறையிலிருந்து
குதித்து விளையாடியது
காலத்தின் சர்வாதிகாரம்
புகைந்து அடங்குவதை
வேடிக்கை பார்த்தது
தத்துவச் சுமை கரைந்து
தொலைதூரத்து வாசனையாய்
மிஞ்சிற்று
எனது குறியீடுகளின்
குறுக்கீடு
இல்லாது போகவே
தன்னைத் தனக்குக்
காட்டிக் கொண்டிருப்பதையும்
கைவிட்டது

Wednesday, January 9, 2008

சுற்றி

செறிவூட்டியபடி
உன்னை நான் சுற்றிவருகிறேன்

இன்றுபோல் இல்லாமல்
இன்னொரு நாள்போல் இல்லாமல்

எங்கோ போய்க்கொண்டிருக்கும்
வெட்டவெளி
நின்று வேடிக்கை பார்க்க
உன்னை நான்
சுற்றி வருகிறேன்

உன்னைச் சுற்றி
வட்டங்கள் உருவானபின்
விலகிக் கொள்கிறேன்

இனி
வட்டங்கள்
செறிவூட்டியபடி
உன்னை சுற்றிவரும்

உன்னைச் சுற்றி
உன் செறிவு உருவானபின்
வட்டங்கள் விலகிக் கொள்ளும்

பின்
உன் செறிவு
செறிவூட்டியபடி
உன்னைச் சுற்றிவரும்

இடைவெளிகள்

யாரும் கவனியாதிருந்தபோது
இடைவெளிகள்
விழித்துக்கொண்டு
விரிவடைந்தன

நட்சத்திரத்திற்கும் நட்சத்திரத்திற்கும்
அர்த்தத்திற்கும் அர்த்தத்திற்கும்
உனக்கும் உனக்கும்
விநாடிக்கும் விநாடிக்கும்
இடைவெளிக்கும் இடைவெளிக்கும்
என்று

இடைவெளிகள் விரிவடைந்தன

வெறியூறி வியாபித்தன

வியாபகத்தின் உச்சத்தில்
மற்றெல்லாம் சுருங்கிப் போயின

ஆங்காங்கிருந்து
இடைவெளிகள் ஒருங்கு திரண்டு
அண்டவட்டமாயின

வட்டத்தின் விளிம்பைச் சுற்றிலும்
சிற்றெறும்புகளாய்
வாழ்க்கைத் துகள்

வட்டத்தின் சுழற்சியில்
நடுவே தோன்றி வளர்ந்தது
பேரொளி

அதற்குப் பேச்சு வரவில்லை
சைகைகளும் இல்லை
எனினும் அதனிடம்
அடக்கமாய் வீற்றிருந்தது
நோக்கமற்று ஒரு
மகத்துவம்

தெருவில் நாம்

வருவோம் போவோமாய்த்
தெருவை நிறைப்போம்

தெரு கனத்து திகைக்க

வாசல் திண்ணைகளில்
படிகளில்
வான்வெளி முழுவதும்
நெரிந்து பெருகுவோம்

பிம்பங்களும் குரல்களும்
பார்வைகளும் எண்ணங்களும்
பாவனைகளும் சாயைகளுமாய்
அடையாளம் குலையாது
அடர்ந்து செறிவோம்

ஜன்னல் கதவை
ஒருக்களித்துத் திறப்போர்
முகங்களில் அறைவோம்

தெருவிலிறங்கி நடக்கத் துணிவோரை
மொய்த்துக் கொண்டு
பரவச மூட்டுவோம்

காலம் ஒற்றியெடுத்துப்
பரிமாணங்களுள் அடைத்த
நகல்கள் அழிந்த பின்னும்
அழியா அசல்களாய்த்
தெருவை நிறைப்போம்

தெரு கனத்துத் திகைத்து அமிழ

கேள்விகளை
உதறி விசிறி விடுவோம்
நிரந்தரமாக அவை
தோள்களின் மீது
தொற்றித் தொடர

எங்கும் இல்லாதிருந்து
எங்கும்
வருவோம் போவோமாய்த்
தெருவை நிறைப்போம்

தீர்மானங்களைக்
கடைந்து எடுத்துவிடாத
சுழற்சி
திளைப்பு என்றில்லாத
திரிதலில்
தெருவை நிறைப்போம்

சூத்திரங்கள்

தனித்து விடப்படும் போது
சூத்திரங்கள்
மெல்லவந்து
சூழ்ந்து கொள்ளும்

தமது உருவாக்கத்தின்
சிறிய பயனை
எனக்குத் தரத் துடிக்கும்

என்னைப்
பேசவிடாமல் தடுக்கும்

நான்கு மூலைகளையும் தொட்டு
என் அறைக்குள்
தீவிரமாக நடக்கும்

ஒன்றோடொன்று
பேசிக் கொள்ளாது
ஆனால்
முன்பே பேசிக்கொண்டது
தெரியும்

காதலித்தும் சண்டையிட்டும்
வடிவழிந்து வடிவுற்று
வளையவரும்

துல்யம் என்று சொல்லித்
தமது கோடுகளைத்
திரும்பக் கொண்டுவந்து
சேர்க்கும்

இருப்பின்
மெல்லிய சூட்டை
உறிஞ்சுவதும் ஊதுவதுமாயிருக்கும்

என் மூடிய கைகளுக்குள்
என் இல்லாமை
புதிதெனத் தோன்றாது
புகுந்திருப்பதைக் கண்டால்
சூத்திரங்கள் நழுவி விலகி
வேறு பாவனைகள்
மேற்கொள்ளும்

நாதம்

நெளிநெளியாய்
மனோலயங்களைக்
காற்றில்
கோதிக்கொண்டு

வருவோர் போவோரின்
சமிக்ஞைகளைச்
சுற்றிலும் நடத்திக் கொண்டு

உலாவ அழைத்துப் போகும்
ஸ்வரங்களிடம்
வார்த்தைகள் கேட்டுக்கொண்டு

-- என்ன செய்கிறாய்?

தெருவில் இறங்கியதும்
திடுக்கென்று ஒட்டி
நடுக்கும் பனிக்காற்று

ஓடையில் கால்வைத்ததும்
புல்லரிக்கக்
காலைக் கடித்துப் போகும்
மீன் குஞ்சுகள்

தொலைவை உணராதிருக்கக்
காதில் விழும்
நட்சத்ரங்களின் சிரிப்பு

எங்கெங்கிருந்தோ வந்து
மையத்தில் எனக்
குவியும் உன்
காலடித் தடங்கள்

-- என்ன நடக்கிறது?

எப்போதும் நீ கேட்பது
நாதமல்ல
நாதத்தில் படியும் உன்
நிழல்

நாதமென நீ காண்பது
நாதத்தில் உன் அசைவுதரும்
அதிர்வு
நீ காணாதது
அதன் உயிர்

புலன்களில்
பொட்டலம் கட்டப் பார்க்கிறாய்

பிரமைகளின் உட்செறிவில்
தனித்திருந்து
பிரியம் வளர்க்கிறாய்

நாத அலையெனக்
கற்பிதம் கொண்டு
கரையோரங்களில்
தேடுகிறாய்

நாதம்
அலைபாய்வதெப்படி
இருப்பது அது

அலைவதன்று

Tuesday, January 1, 2008

சொல்லாதிருத்தலும் எளிது

சொல்வதற்கென்று ஒன்று
சொல்லும்போது கமழும்
சிலநாள் கழித்து,
தெருவில் போவோரைப்
பரட்டையாய் வழிமறிக்கும்

சொல்லும்போது தனித்திருக்கும்
சிலநாள் கழித்து,
அழுக்குக் கந்தல் மூட்டைகளுடன்
உட்கார்ந்திருக்கும்

சொல்லாதிருந்ததற்கும்
சொன்னதற்கும்
இடைவெளியில்
புல்வளர்த்து
பூமியை மூடும்

தொடர்ச்சியாய்ப்
பேசவராது

ஆயினும்
பனியிரவில்

ஏதோ உந்துதலில்
ஊர்நெடுகப் புலம்பி உறங்கும்

எப்பொழுதும்
எதன் ஓரத்திலும் நின்று
ஒட்டுக் கேட்கும்

கூர்ந்துவிழும்
பார்வைகளை நழுவி
திடுக்கிட
இல்லாதாகும்

பேசப்படுவதில் சிக்காமல்
பின்னல்களைப்
போட்டுவிட்டுப் போகும்

சொல்வதற்கென்று ஒன்று
சொல்லுதல் யார்க்கும் எளிது
சொல்லதிருத்தலும் எளிது

கோடு

கோடு வரைவதெனின்
சரி
வரைந்து கொள்

இப்புறம் அப்புறம்
எதையேனும் ஒன்றை
எடுத்துக்கொள்

எடுத்துக் கொள்ளாதது
எதிர்ப்புறம் என்பாய்

இப்போதைக்கு
அப்படியே வைத்துக்கொள்

முதலிலேயே
மறுபுறத்தை எடுத்துக்கொண்டிருந்தால்?

மாறி மாறி
எதிர்ப்புறக் குழப்பம்

இருபுறமும் உனது?
இருபுறமும் எதிர்ப்புறம்?

எதுவும்
எவ்வாறும்
இல்லை என்று
சலிப்பாய்

களைத்து உறங்கும் உலகம்
ஆரம்பத்திலேயே
முடிவைத் தடவியெடுக்க
நின்றாய்

இது என்றோ அது என்றோ
இரண்டும் இல்லையென்றோ
வருகிறது
உன்முடிவு

அதனால்
கோடுவரைவதெனின்
வரைந்து கொள்

அவர்

கொஞ்சம் கொஞ்சமாக
விலகி
விலகலில் நீடித்தாயெனில்
நீ வாழ்கிறாய்
என்றார்

முடிந்து போனதாய்ப்
போக்குக் காட்டும்
கணங்களில்
ஒட்டிக்கொண்டு சிதறினாய்
உன் சாவைச் சரிபார்த்துக்கொள்
என்றார்

பின்னும்
நீ இருப்பதாக உணரத் தாமதமாகி
இருந்ததாக  உணர்வது வழக்கமெனில்
வாழ்க்கை
எட்டி நின்று உன்னை
முறைப்பதை,
சாவின் சஞ்சலத்தை
ஒருபோதும் நீ காணப் போவதில்லை
என்றார்

சொற்களின் கும்மாளத்திலும்
எண்ணங்களின் ஆடம்பரத்திலும்
உன் நிகழ் அனுபவம்
உயிர்ப்படங்கியது
அறியாய்

அறியாய் மேலும்
நிகழ்வில் நின்றே
நிகழ்வினின்றும் விலகும்
நெறி எது என்பதை

கூடவே நிகழ்ந்துவா
கொஞ்ச நேரத்தில் நீ
நிகழ்வுடன் அருகே
இணைகோட்டில் ஓடுவாய்

ஆச்சரியமாகவே உன் இருத்தல்
உனைவிட்டு விலகி உன்னுடன்
ஓடிவரக் காண்பாய்

என்றார்

இன்னும் சொன்னார்.

விடைகள்

விடைகள்
மிகவும் மெலிந்தவை

ஏதோ சுமந்து வருவன போல
முக்கி முனகி வியர்வை துளித்து
நம் முகத்தில்
திருப்தி தேடுபவை

தரையில் கால்பாவாது
நடக்கவும்
நீரில் நனையாமல்
நீந்தவும்
அறிந்தவை

முந்தாநாள்
ஒரு விடையை
எதிர்ப்பட்டேன்

என்னைப் பார்த்தவுடன்
அது
உடையணிந்து
உருவுகொண்டது

தன்னை ஒருமுறை
சரிபார்த்துக் கொண்டதும்
எங்களைச் சுற்றி
ஒரு அசட்டுமணம் பரப்பிவிட்டு
என்னை நேர்கொண்டது

நான்
ஒன்றும் சொல்லவில்லை

நெளிந்தது

கலைந்து மங்கும்தன்
உருவை
ஒருமித்துக் கொள்ளக்
கவலையோடு முயன்றது

சுற்றிலும் பார்த்துவிட்டு
ஒருமுறை
என்னைத் தொடமுயன்றது

நான்
எதுவுமறியாத
பாவனை காட்டியதில்
ஆறுதலுற்றுக்
கொஞ்சம் நிமிர்ந்தது

எதிர்பாராது வீசிய காற்றில்
இருவரும்
வேறுவேறு திசைகளில்
வீசப்பட்டோம்

திரும்பப்போய்த்
தேடிப்பார்த்த போது
சாமந்திப்பூ இதழ்கள் போல்
பிய்ந்து கிடந்தன
சில சாகசங்கள் மட்டும்

முன்னால்

முன்னால் போவது
எப்போதும் ஒரு வசதி

திரும்பிப் பார்க்க நேரும்

யாரும் வரவில்லை என்றால்
'முன்னால்' என்பதன்
புது அர்த்தம் புரியும்

புல்பூண்டற்ற வெட்டவெளியும்
வெயில் கொளுத்தும் வெட்டவானமும்
உன்னை என்ன செய்வதென்று
தவிக்கும்

           0

எரிந்து கருகும் நேரத்தை
எச்சிலால் ஈரப்படுத்திக்
கூட்டிப் போகலாம்

உச்சியிலிருந்து
நகர மறுக்கும்
சூரியனை
யாருக்கும் தெரியாமல்
தொட்டுப் பார்க்கலாம்

           0

முன்னால் போவதென்பது
முடிவை முந்திப் போவது

உனக்கு முன்னாலும் போவது
உன் அசைவுக்கு முன்னாலும் தான்

அதனால்
'முன்னாலு'க்கு முன்னால்
போவது

போகப் போகப் பார்ப்பாய்
முன்னால்கள் சற்றுத் தயங்கும்போது
அடுக்கடுக்காக
அவற்றுக்கும் முன்னால்கள் இருப்பதை

குறிப்பிட்ட திசையிலன்றி
சுற்றிலும்
எல்லாத் திசைகளிலும்
முன்னால்கள்
கானல்போல் அசைந்து
அழைக்கும்

ஒவ்வொரு கணத்தின் பிளவிலும்
வெவ்வேறு பிரதேசங்கள்
வெளிப்படும்

என்ன நினைப்பாய்
முன்னால் என்பதை

என்ன நினைக்காதிருப்பாய்

எதுவாயினும்
முன்னால் போவது
எப்போதும் ஒரு வசதி

அந்தி

மனசின் உச்சியில் குவிந்து
முரடுபட்டது அந்தி

எதுமுன் எதுபின் என்று
தயக்கத்தில் தேங்கியது
இயக்கம்

அடிமண்ணின் வெப்பத்தில்
புழுங்கியது மூச்சு

இனம்புரியாது
இருண்ட அழுத்தம்

உணர்வின் அணுக்கள் சிதறி
உறைந்தன
வாசற் படிகளில்

ஓசைகள் இறுகிப்
பாறைகளாயின

அவை செத்தன எனக்கொண்டு
சுருதி கிளம்பிக்
கமழ்ந்தது

பழகிய பரவசங்கள்
சக்தியற்றுக் கிடந்தன

மந்திரங்கள்
வெளியேறிச்
செய்வதறியாது திகைத்துக்
கூட்டமாய் அமர்ந்தன
மரத்தடியில்

என் வார்த்தைகள்

என் வார்த்தைகளை நான்
இழந்து விட்டதாகச்
சொன்னார் அவர்

என் ஆசை அது -- ஆனால்
உண்மையில்லை

உணர்ச்சிகளின் இரைச்சல் இடுக்கிலும்
நடுக்கத்தின்
இரண்டு அசைவுகளின் நடுவேயும்
மரணம்
விளையாட்டாக என்னை
அழைத்துப்போன சந்தர்ப்பங்களிலும்
ஒதுங்கி நின்றிருந்தது
பிறகு தொடர்ந்தன

எல்லைகள் உடைந்து
மனசில்
தன்பொறுப்பற்ற வெளி
விரிவு காண்கையில்
மூச்சடக்கிக் காத்திருந்தன


என் சப்தக் கூறுகள் பிளந்து
மௌனம்
நீலம் காட்டியபோது
அபத்தமான சைகைகளுடன்
வெட்கமற்ற வெறுமையில்
புரண்டு கொண்டிருந்தன
வார்த்தைகள்

முன்பின்னைக் கடக்க முயன்று
மூர்க்கம் மேலிட்டபோது
என் வார்த்தைகளின் பீடிப்பே
என்னை என்னிடத்தில் சேர்த்தது

அர்த்த மாயையில்
சிக்கிக் கொண்ட
என் வார்த்தைகளைத்
தப்பிப்போக முயன்ற முயற்சிகள்
வீணாகின
மனசின் சங்கேதம் புரிந்து
தவிதவித்துத் தொடர்கின்றன
வார்த்தைகள்

இருப்பிடம் எதுவுமின்றிப்
போகும் இடங்களின்
பயண விவரங்களைச்
சேகரித்துக் கொண்டிருப்பன,

சுற்றிச் சுற்றி
விசிறல்களில்
தோற்றம் கொடுத்து
மயக்குவன

என் வார்த்தைகள்

என்றாலும்
இவைகளைத் தப்பமுடியவில்லை
இதோ இந்தக் கணம்வரை

இருத்தல்

இருப்பதொன்றே
முடிவற்றது
போவது என்றால்
தவிர்க்க முடியாதது
முடிவு

'போதலை நிறுத்திவிட்டால்
இருத்தலாகும்'
எனக்கேட்டு,
நிறுத்த,
அது வெறும்
போதலில் இருத்தலேயானது

இருத்தலைத் தேடிப்
போவதென்றால்
இறுதியில் அதைப் பிடிக்கலாமோ?

ஆனால்
எதன் முடிவுமன்று இருத்தல் என்பதால்
போதல் வீண்

இருப்பவர்களை விசாரித்தால்:

இருத்தலில்
எது செய்கிறீர்கள்?

எது செய்வதும்
இருத்தலாகாது
இருத்தலில் போதலாகிவிடும்

இருத்தலினுள்ளே
என்ன இருக்கிறது?

எதுவுமில்லை
இருந்தால்
இருத்தல் இயக்கம் காட்டும்
இயக்கம் இருத்தல் அல்ல
போதல்

பின் இருத்தல் என்னதான்?

இல்லாதிருத்தலே
இருத்தல்

விதம்

விதம்
என்ன என்று தெரியாமல்
விழிப்பதே வழக்கம்

விதம்
மெல்லச் சிரித்து
இரக்கத்தோடு பார்த்து
அசைவு எதுவுமின்றிக்
கடந்து போகும்
(அப்படித் தோன்றும்)

எனக்கோ
விதம்
என்ன என்பது புரியாது

விதம்
கிடத்திய வேளைகளை
எழுப்பப் பார்த்ததில்

சூழலிலிருந்து
பிரிபட்டு
உருக்கொண்டெழும்
விஷயங்களை
ஊடுருவியதில்

விதம் புணர்ந்த
வாழ்க்கையை
நீள்கோடுகளில் ஆராய்ந்ததில்

எதிலும் தோல்வி

ஒவ்வொரு வினாடியும்
உலகைச் சுற்றி போர்த்திய
தன் சவ்வுப் படலத்தை
அச்சுப் பதிவுடன்
உரித்துக் கொண்டு நகர்வதை
இருந்து இருந்து பார்த்தாயிற்று

இருபுறமும்
ஏமாற்றும் எளிமைகளால்
தொடரப்பட்டும்

கபடத்தின் வெளிர் விரிந்த
வானத்தைத்
தடவிக்கொண்டும்
நடந்து நடந்து பார்த்தாயிற்று

எதிலும் தோல்வி

காத்திருக்கிறேன்
விதம்
விதமாகவே
தென்படுவதற்காக

எல்லைக் கோடுகள்

தூரத்தே
எல்லைக் கோடுகள்
திமிராக மினுக்கின

தம் தடத்தில்
துள்ளிக் குதித்து
விறைப்பாக நின்றன

குதூகலம் புரையேறிச் செருமின

வானம் காரையுதிர்க்க
அதிர்ந்தன

சுற்றிலும் காற்றைப் புகைத்து
ஆவி காட்டின

ஏகமாய்க் கமழ்ந்து
உயிர் உறிஞ்சி ஈர்த்தன

குரூரமாய் வெறித்துச்
சவாலிட்டுக் கூவின

பரபரப்பு உள்ளோடி
அவற்றின் மூட்டுகள்
கிறீச்சிட்டன

தம்முள்
தேடல்கள் ஊடுருவிய துளைகளை
அவசரமாய் அடைத்து மழுப்பின

தூரத்தே
எல்லைக் கோடுகள் -- இங்கே
கூச்சம் என் கால்களைக்
குடைந்தது

லயிப்பு

லயிப்பைத் தவறவிட்ட போது --

வெயிலடித்துக் கொண்டிருந்தது

வழமைபோல்
பொறிகளிலும் கதிர்களிலும்
அடையாளம் கொடுத்துக் கொண்டிருந்தது
ஒளி

தோற்றங்களிடம்
தோற்றுக் கொண்டிருந்தோம்

தலப்புக்களில் அடங்கிப்
பத்தி பிரிந்திருந்தனர் மக்கள்

சங்கீதம்
நிறங்களைக்
கற்பித்துக் கொண்டிருந்தது

வாய் ஓயாமல் பேசிக்கொண்டிருந்தது
தத்துவம்

வார்த்தைகள் செய்துகொடுத்த
இடவசதிக்குள்
வாழ்க்கை
மீண்டும் நுழைந்து
திருப்திப் பட்டுக் கொண்டது

ஏகமாய்ப் போர்த்திருந்த சுருதி
விலகவும்
மீண்டும்
தன் பொய்வடிவங்களில்
வியாபித்தது வெளி

அதிர்வு

அதிர்வுகளில் தெரியும்
சுகம் பற்றிப்
பேச்சு வந்தது

கொஞ்சம் பொறுத்து
அவன் சொன்னான் - 
இருக்கும் சுகத்தையே
அதிர்வு
விசிறிவிடுகிறது

இவன் சொன்னான் -
விசிறத் தெரிவதே
கல்வியும் கலையுமானது

மறுபடி அவன் -
போயுணர்வதும்
வருவித்துணர்வதுமாயிற்று
வாழ்க்கை

மீண்டும் இவன் -
இருந்ததனை
இருந்துணர்வதென்பது
இல்லாமல் போனது




சாயைகளைத் தின்கிறாய்

கூடக்கூட வந்து நின்று விடுகிறாய்

இளம்பொழுதுகள்
பேசிக்கொண்டிருக்கும்போது
செருமிக் காட்டுகிறாய்

சிலசமயம்
உயிர்ததும்பிப்
பளபளத்து
சமிக்ஞை எதுவும் செய்யாமல்
பின்தொடர்கிறாய்
திருப்பங்களில் மட்டும்
சற்று முன்னால் போய்நின்று
மறுபடி பின்னால் நடக்கிறய்

தனிமையின் சந்தை இரைச்சலில்
புரண்டெழுந்து
புழுதி கிளப்புகிறாய்

வனாந்தரங்களின் போது
மூச்சடைக்கும் அடர்த்தியில்
என் பாதத்தின்மீது
மெல்லத் தலைவைக்கிறாய்

என் பிளவுகளிலிருந்து
ஆவியெழுந்தால்
இளைத்தபடி பார்த்துப் படுத்திருக்கிறாய்

இருள் நிகழும்போது
இயலாமையின் சோகம் தேக்கி
அண்ணாந்து நிற்கிறாய்

என் அற்ப இயக்கங்களில்
உனக்கொரு
வடிவம் அமைந்தபோதே
நினைத்தேன்
நீ
சாயைகளைத் தின்பாய் என்று

அப்படித்தான் நடக்கிறது

வெறிப்பு

வாசல் வெறிச்சிட்டது

அசையாமல் தொங்கிக்
காய்ந்திருந்தது மாவிலைத் தோரணம்

காலம்
ஊசியிட்டுக் குத்தி மல்லாத்திய
பூச்சிகளாய்
மனிதர்கள் -- புகைப்படங்களில்
பேசமுயன்று
சிரித்து திகைத்து இப்படி

மரப்பெட்டிமேல்
சில நாளைய தூசி

விருட்டென்று
வீசியடித்த காற்றில்
அடுக்கிலிருந்து
சிதறிப் பறந்தோடி
மூலைகளில் கிடந்து
வெறித்தன
எண்ணங்கள்

எப்போதும் விரட்டப்படத்
தயார் நிலையில்
ஒட்டியும் ஒட்டாமலும்
புழுங்க`ல் மணம்

சமாதானமாகிக் கொண்ட
சக்களத்திகள் போல்
இருளும் இருளும்

பின்னே
கிணற்று மேடையில்
சீக்கிரமே வந்துவிட்ட
பௌர்ணமி நிலாவின்
விவரம் தெரியாத
வெறிப்பு


திரும்பும்போது
ஒருகுரோட்டன்ஸ் கொத்தைக்
கிள்ளியெடுத்துக் கொண்டேன்
ஒரு ஞாபகத்துக்காக