Tuesday, January 1, 2008

விதம்

விதம்
என்ன என்று தெரியாமல்
விழிப்பதே வழக்கம்

விதம்
மெல்லச் சிரித்து
இரக்கத்தோடு பார்த்து
அசைவு எதுவுமின்றிக்
கடந்து போகும்
(அப்படித் தோன்றும்)

எனக்கோ
விதம்
என்ன என்பது புரியாது

விதம்
கிடத்திய வேளைகளை
எழுப்பப் பார்த்ததில்

சூழலிலிருந்து
பிரிபட்டு
உருக்கொண்டெழும்
விஷயங்களை
ஊடுருவியதில்

விதம் புணர்ந்த
வாழ்க்கையை
நீள்கோடுகளில் ஆராய்ந்ததில்

எதிலும் தோல்வி

ஒவ்வொரு வினாடியும்
உலகைச் சுற்றி போர்த்திய
தன் சவ்வுப் படலத்தை
அச்சுப் பதிவுடன்
உரித்துக் கொண்டு நகர்வதை
இருந்து இருந்து பார்த்தாயிற்று

இருபுறமும்
ஏமாற்றும் எளிமைகளால்
தொடரப்பட்டும்

கபடத்தின் வெளிர் விரிந்த
வானத்தைத்
தடவிக்கொண்டும்
நடந்து நடந்து பார்த்தாயிற்று

எதிலும் தோல்வி

காத்திருக்கிறேன்
விதம்
விதமாகவே
தென்படுவதற்காக

No comments: