கூடக்கூட வந்து நின்று விடுகிறாய்
இளம்பொழுதுகள்
பேசிக்கொண்டிருக்கும்போது
செருமிக் காட்டுகிறாய்
சிலசமயம்
உயிர்ததும்பிப்
பளபளத்து
சமிக்ஞை எதுவும் செய்யாமல்
பின்தொடர்கிறாய்
திருப்பங்களில் மட்டும்
சற்று முன்னால் போய்நின்று
மறுபடி பின்னால் நடக்கிறய்
தனிமையின் சந்தை இரைச்சலில்
புரண்டெழுந்து
புழுதி கிளப்புகிறாய்
வனாந்தரங்களின் போது
மூச்சடைக்கும் அடர்த்தியில்
என் பாதத்தின்மீது
மெல்லத் தலைவைக்கிறாய்
என் பிளவுகளிலிருந்து
ஆவியெழுந்தால்
இளைத்தபடி பார்த்துப் படுத்திருக்கிறாய்
இருள் நிகழும்போது
இயலாமையின் சோகம் தேக்கி
அண்ணாந்து நிற்கிறாய்
என் அற்ப இயக்கங்களில்
உனக்கொரு
வடிவம் அமைந்தபோதே
நினைத்தேன்
நீ
சாயைகளைத் தின்பாய் என்று
அப்படித்தான் நடக்கிறது
Tuesday, January 1, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment