Tuesday, January 1, 2008

சாயைகளைத் தின்கிறாய்

கூடக்கூட வந்து நின்று விடுகிறாய்

இளம்பொழுதுகள்
பேசிக்கொண்டிருக்கும்போது
செருமிக் காட்டுகிறாய்

சிலசமயம்
உயிர்ததும்பிப்
பளபளத்து
சமிக்ஞை எதுவும் செய்யாமல்
பின்தொடர்கிறாய்
திருப்பங்களில் மட்டும்
சற்று முன்னால் போய்நின்று
மறுபடி பின்னால் நடக்கிறய்

தனிமையின் சந்தை இரைச்சலில்
புரண்டெழுந்து
புழுதி கிளப்புகிறாய்

வனாந்தரங்களின் போது
மூச்சடைக்கும் அடர்த்தியில்
என் பாதத்தின்மீது
மெல்லத் தலைவைக்கிறாய்

என் பிளவுகளிலிருந்து
ஆவியெழுந்தால்
இளைத்தபடி பார்த்துப் படுத்திருக்கிறாய்

இருள் நிகழும்போது
இயலாமையின் சோகம் தேக்கி
அண்ணாந்து நிற்கிறாய்

என் அற்ப இயக்கங்களில்
உனக்கொரு
வடிவம் அமைந்தபோதே
நினைத்தேன்
நீ
சாயைகளைத் தின்பாய் என்று

அப்படித்தான் நடக்கிறது

No comments: