Tuesday, January 1, 2008

வெறிப்பு

வாசல் வெறிச்சிட்டது

அசையாமல் தொங்கிக்
காய்ந்திருந்தது மாவிலைத் தோரணம்

காலம்
ஊசியிட்டுக் குத்தி மல்லாத்திய
பூச்சிகளாய்
மனிதர்கள் -- புகைப்படங்களில்
பேசமுயன்று
சிரித்து திகைத்து இப்படி

மரப்பெட்டிமேல்
சில நாளைய தூசி

விருட்டென்று
வீசியடித்த காற்றில்
அடுக்கிலிருந்து
சிதறிப் பறந்தோடி
மூலைகளில் கிடந்து
வெறித்தன
எண்ணங்கள்

எப்போதும் விரட்டப்படத்
தயார் நிலையில்
ஒட்டியும் ஒட்டாமலும்
புழுங்க`ல் மணம்

சமாதானமாகிக் கொண்ட
சக்களத்திகள் போல்
இருளும் இருளும்

பின்னே
கிணற்று மேடையில்
சீக்கிரமே வந்துவிட்ட
பௌர்ணமி நிலாவின்
விவரம் தெரியாத
வெறிப்பு


திரும்பும்போது
ஒருகுரோட்டன்ஸ் கொத்தைக்
கிள்ளியெடுத்துக் கொண்டேன்
ஒரு ஞாபகத்துக்காக

No comments: