Tuesday, January 1, 2008

கோடு

கோடு வரைவதெனின்
சரி
வரைந்து கொள்

இப்புறம் அப்புறம்
எதையேனும் ஒன்றை
எடுத்துக்கொள்

எடுத்துக் கொள்ளாதது
எதிர்ப்புறம் என்பாய்

இப்போதைக்கு
அப்படியே வைத்துக்கொள்

முதலிலேயே
மறுபுறத்தை எடுத்துக்கொண்டிருந்தால்?

மாறி மாறி
எதிர்ப்புறக் குழப்பம்

இருபுறமும் உனது?
இருபுறமும் எதிர்ப்புறம்?

எதுவும்
எவ்வாறும்
இல்லை என்று
சலிப்பாய்

களைத்து உறங்கும் உலகம்
ஆரம்பத்திலேயே
முடிவைத் தடவியெடுக்க
நின்றாய்

இது என்றோ அது என்றோ
இரண்டும் இல்லையென்றோ
வருகிறது
உன்முடிவு

அதனால்
கோடுவரைவதெனின்
வரைந்து கொள்

No comments: