Tuesday, January 1, 2008

சொல்லாதிருத்தலும் எளிது

சொல்வதற்கென்று ஒன்று
சொல்லும்போது கமழும்
சிலநாள் கழித்து,
தெருவில் போவோரைப்
பரட்டையாய் வழிமறிக்கும்

சொல்லும்போது தனித்திருக்கும்
சிலநாள் கழித்து,
அழுக்குக் கந்தல் மூட்டைகளுடன்
உட்கார்ந்திருக்கும்

சொல்லாதிருந்ததற்கும்
சொன்னதற்கும்
இடைவெளியில்
புல்வளர்த்து
பூமியை மூடும்

தொடர்ச்சியாய்ப்
பேசவராது

ஆயினும்
பனியிரவில்

ஏதோ உந்துதலில்
ஊர்நெடுகப் புலம்பி உறங்கும்

எப்பொழுதும்
எதன் ஓரத்திலும் நின்று
ஒட்டுக் கேட்கும்

கூர்ந்துவிழும்
பார்வைகளை நழுவி
திடுக்கிட
இல்லாதாகும்

பேசப்படுவதில் சிக்காமல்
பின்னல்களைப்
போட்டுவிட்டுப் போகும்

சொல்வதற்கென்று ஒன்று
சொல்லுதல் யார்க்கும் எளிது
சொல்லதிருத்தலும் எளிது

No comments: