Wednesday, January 9, 2008

நாதம்

நெளிநெளியாய்
மனோலயங்களைக்
காற்றில்
கோதிக்கொண்டு

வருவோர் போவோரின்
சமிக்ஞைகளைச்
சுற்றிலும் நடத்திக் கொண்டு

உலாவ அழைத்துப் போகும்
ஸ்வரங்களிடம்
வார்த்தைகள் கேட்டுக்கொண்டு

-- என்ன செய்கிறாய்?

தெருவில் இறங்கியதும்
திடுக்கென்று ஒட்டி
நடுக்கும் பனிக்காற்று

ஓடையில் கால்வைத்ததும்
புல்லரிக்கக்
காலைக் கடித்துப் போகும்
மீன் குஞ்சுகள்

தொலைவை உணராதிருக்கக்
காதில் விழும்
நட்சத்ரங்களின் சிரிப்பு

எங்கெங்கிருந்தோ வந்து
மையத்தில் எனக்
குவியும் உன்
காலடித் தடங்கள்

-- என்ன நடக்கிறது?

எப்போதும் நீ கேட்பது
நாதமல்ல
நாதத்தில் படியும் உன்
நிழல்

நாதமென நீ காண்பது
நாதத்தில் உன் அசைவுதரும்
அதிர்வு
நீ காணாதது
அதன் உயிர்

புலன்களில்
பொட்டலம் கட்டப் பார்க்கிறாய்

பிரமைகளின் உட்செறிவில்
தனித்திருந்து
பிரியம் வளர்க்கிறாய்

நாத அலையெனக்
கற்பிதம் கொண்டு
கரையோரங்களில்
தேடுகிறாய்

நாதம்
அலைபாய்வதெப்படி
இருப்பது அது

அலைவதன்று

No comments: