Wednesday, January 9, 2008

சூத்திரங்கள்

தனித்து விடப்படும் போது
சூத்திரங்கள்
மெல்லவந்து
சூழ்ந்து கொள்ளும்

தமது உருவாக்கத்தின்
சிறிய பயனை
எனக்குத் தரத் துடிக்கும்

என்னைப்
பேசவிடாமல் தடுக்கும்

நான்கு மூலைகளையும் தொட்டு
என் அறைக்குள்
தீவிரமாக நடக்கும்

ஒன்றோடொன்று
பேசிக் கொள்ளாது
ஆனால்
முன்பே பேசிக்கொண்டது
தெரியும்

காதலித்தும் சண்டையிட்டும்
வடிவழிந்து வடிவுற்று
வளையவரும்

துல்யம் என்று சொல்லித்
தமது கோடுகளைத்
திரும்பக் கொண்டுவந்து
சேர்க்கும்

இருப்பின்
மெல்லிய சூட்டை
உறிஞ்சுவதும் ஊதுவதுமாயிருக்கும்

என் மூடிய கைகளுக்குள்
என் இல்லாமை
புதிதெனத் தோன்றாது
புகுந்திருப்பதைக் கண்டால்
சூத்திரங்கள் நழுவி விலகி
வேறு பாவனைகள்
மேற்கொள்ளும்

No comments: