தனித்து விடப்படும் போது
சூத்திரங்கள்
மெல்லவந்து
சூழ்ந்து கொள்ளும்
தமது உருவாக்கத்தின்
சிறிய பயனை
எனக்குத் தரத் துடிக்கும்
என்னைப்
பேசவிடாமல் தடுக்கும்
நான்கு மூலைகளையும் தொட்டு
என் அறைக்குள்
தீவிரமாக நடக்கும்
ஒன்றோடொன்று
பேசிக் கொள்ளாது
ஆனால்
முன்பே பேசிக்கொண்டது
தெரியும்
காதலித்தும் சண்டையிட்டும்
வடிவழிந்து வடிவுற்று
வளையவரும்
துல்யம் என்று சொல்லித்
தமது கோடுகளைத்
திரும்பக் கொண்டுவந்து
சேர்க்கும்
இருப்பின்
மெல்லிய சூட்டை
உறிஞ்சுவதும் ஊதுவதுமாயிருக்கும்
என் மூடிய கைகளுக்குள்
என் இல்லாமை
புதிதெனத் தோன்றாது
புகுந்திருப்பதைக் கண்டால்
சூத்திரங்கள் நழுவி விலகி
வேறு பாவனைகள்
மேற்கொள்ளும்
Wednesday, January 9, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment