Tuesday, January 1, 2008

அவர்

கொஞ்சம் கொஞ்சமாக
விலகி
விலகலில் நீடித்தாயெனில்
நீ வாழ்கிறாய்
என்றார்

முடிந்து போனதாய்ப்
போக்குக் காட்டும்
கணங்களில்
ஒட்டிக்கொண்டு சிதறினாய்
உன் சாவைச் சரிபார்த்துக்கொள்
என்றார்

பின்னும்
நீ இருப்பதாக உணரத் தாமதமாகி
இருந்ததாக  உணர்வது வழக்கமெனில்
வாழ்க்கை
எட்டி நின்று உன்னை
முறைப்பதை,
சாவின் சஞ்சலத்தை
ஒருபோதும் நீ காணப் போவதில்லை
என்றார்

சொற்களின் கும்மாளத்திலும்
எண்ணங்களின் ஆடம்பரத்திலும்
உன் நிகழ் அனுபவம்
உயிர்ப்படங்கியது
அறியாய்

அறியாய் மேலும்
நிகழ்வில் நின்றே
நிகழ்வினின்றும் விலகும்
நெறி எது என்பதை

கூடவே நிகழ்ந்துவா
கொஞ்ச நேரத்தில் நீ
நிகழ்வுடன் அருகே
இணைகோட்டில் ஓடுவாய்

ஆச்சரியமாகவே உன் இருத்தல்
உனைவிட்டு விலகி உன்னுடன்
ஓடிவரக் காண்பாய்

என்றார்

இன்னும் சொன்னார்.

No comments: