Showing posts with label மாலை. Show all posts
Showing posts with label மாலை. Show all posts

Saturday, January 12, 2008

மாலை -- போய்வருகிறேன்

ரத்தம் இருள்வது தெரிகிறது

கைகால் வீச்சு
இயக்கம் காட்டாத இயக்கத்தினுள் கரைந்து
நிற்பது ஆகவே இருக்கிறது, நடப்பது

வாய்க்கால் தாண்டி
மேட்டுப் பகுதியிலிருந்து
மெல்லிய அழைப்புக்குரல்,
சற்றே இடைநேரம்  விட்டு விட்டு,

அந்த பகுதிக்குள் புழங்கும் குரல்

நேரத்தைச்
சுருட்டிக் கொண்டிருக்கிறது நேரம்
வயிற்றில் புரண்டு பதுங்குகிறது

கவியும் இமைகளுடன்
கூடவே வானம்

பறவை ஒலிகளைப் பூசிச்
சருமம் மெத்திடுகிறது மாலை

என் மாலையைக் காட்டில் நிறுத்தி
விடைபெற்றுக்கொள்ள வேண்டும்
வீட்டுக்கு அழைத்துப்போக முடியாது
0-0

போய்வருகிறேன்

இருண்ட ரத்தம்
உன்னைச் சுழற்றித் தந்துகொண்டிருக்கும்

இமைகளுக்குள்
வானம் உன்னை வருடக் கொடுக்கும்

மாறிமாறி வருதல் ஒழிந்து
முற்றிலும் நாம் இழந்துகொள்ளும் வரை
இப்படியே நடக்கட்டும்

போய்வருகிறேன்

மாலை -- சிறுதெருக்கள்

சிறுதெருக்களின் வேளை அது

அடக்கமாக மகிழ
அவைகளுக்குத்தான் தெரியும்

எல்லாப் பருவங்களிலும்
இறுக்கம் சற்றுத் தளரும் நேரங்களில்
தரையிலிருந்து சிறிது மேலெழும்பின

எளிய சந்திப்புகளில்
கைகோத்து
மாலையின் அணைப்புக்காக
அண்ணாந்திருந்தன

ஒன்றுக்கொன்று
(நட்புக் குறையாமலே)
பரிமாற்றம் நின்றுவிட்டது; அதனால்
குப்பை சேரவில்லை

எந்த உத்தரவுமின்றியே
தீவிரமாக நினைப்பதை நிறுத்தின; அதனால்
அவற்றின் சுவாசத்தில்
மனிதவாடை மறைந்தது

தமது மூல அமைப்பைக்
கிளறுவதையும் நிறுத்தின; அதனால்
அவற்றின் மீது
பயமற்று இறங்கியது மாலை

வெறும் எழுத்துக்கள்
மணிகளைப் போல
அங்கங்கே சிதறிக் கிடந்தன
சறுக்கியும் பொறுக்கியும் விளையாடப்
பிள்ளைகள்தான் இல்லை

மாலை -- மூடிவைக்கப்பட்ட மாலை

நேற்றுப் போலவே இன்றும்
காற்றே வீசவில்லை

தெரு இரைச்சலும் நெரிசலும்
மனித சலனங்களின்
அனைத்து உராய்வுகளும்
மாலைக்கு
வெளியேதான்
நிகழ்ந்துகொண்டிருக்கின்றன

இறுக
மூடிவைக்கப்பட்டிருக்கிறது
இந்த மாலை

நடுமுற்றத்தை வற்றச் செய்த
தனிமை
இனி என்பது இல்லாமல்
இருக்கிறது

மாலையின்
உறைந்த ஸ்வரங்களின் அருகே
தொடப்படாமலும்
தொடாமலும்
என் அம்சம் பலவும் பிரிந்துவிட்ட
நான்

மூடிவைக்கப்பட்டிருக்கிறோம்
நாங்கள்

காற்று வீசவிருக்கும்
இரவின்
அபத்த ஆசுவாசத்திற்கும்
வெளிச்சம் ஆபாசப்படுத்தும்
பகலின்
அசட்டுக் கவர்ச்சிக்கும்
நாங்கள் திறந்துகொடுக்கப் போவதில்லை

எட்டி நெருங்க முடியாதவாறே
நீங்களும் நாங்களும்

மாலை -- கதை

அந்தி விளையாட்டு
முடிகிறது
வாசற்படிகளில் பிள்ளைகள்
வந்து தளைப்படுகின்றனர்

பேச்சும் சிறு சிரிப்புகளும் விசிறி
மஞ்சளாய்க் கனல்கிறது மாலை

கதை மனிதர்கள்
ஆழங்களிலிருந்து
மின்னிக்கொண்டு
வருவதும் போவதுமாயிருப்பர்

ஏதேதோ அடுக்குகளிலிருந்து
ஏதேதோ அரூபங்கள்
பறந்து படிந்து மறையும்

காலத்துள் நிகழ்ந்திராத காலம்
தகதகத்து
பிள்ளைகளின் கண்களில் இறங்கும்

கதைகள் சற்றே வண்ணம் கலங்கி,
எனினும் உள்வெளிச் சஞ்சரிப்பில்
உயிர் சேகரித்துக்கொண்டு
பழைய இருப்பிலேயே
புதிது புதிதாகும்

எல்லாவற்றுடனும் இழைந்து
இருத்தலே
காத்திருத்தலாக
நான்

மாலை -- பிணம்போல்

வெளியில் போய்ப்
புழுதிவிசாரித்துத்
திரும்புவதற்குள்
எல்லா மாலைகளும்
--என்னுடையது தவிர --
கூடிவிட்டன

அசைவுகளை அதட்டி
இன்னது இன்னவைகளின் விளையாட்டை
ஊதி நிறுத்திக்
கூடிவிட்டன

தலைதலையாகத்
தடவித் துயிற்றும்
இருளை ஆடி

யோசனை அமிழ்ந்து மறையும்
பிரவாக அமைதியில்
மூச்சை அடக்கிக் --
கூடிவிட்டன

அடிவான் விளிம்பில்
பறவைக் கூச்சல் மொய்த்துப்
பிணம்போல் --
என்மாலை

மாலை -- அசதி

உயரமான கல்சுவருக்குப் பின்னால்
புழுதி படிந்த தென்னைமடல் மீது
குத்திச் சரிந்து
குவியலாய்ச் சூரியக் கதிர்கள்

கோடிக்கணக்கில் கைகால் முகங்களும்,
முரண்டு செய்து
உந்தி எழுந்த உக்கிரங்களும்
சோர்ந்த கதிர்களுடன் பின்னிச்
சுருண்டிருக்கின்றன

கனக்கத் தொடங்கும் மாலை

அவ்வளவு கனமும்
செறிந்து இறங்கிப்
பாதங்களில்

பாதங்களை நோக்கி இறங்கும்
இமையினுள்
நிலைகுத்திக் கிடக்கும் நிழல்கள்

சுழல்வதும் சுற்றுவதுமான
இயக்கங்கள்
நினைவிழந்துகொண்டிருக்கின்றன

கடைசி அந்தி போலும்
0-0

அசதி

காலையில்
இவ்வழியே போனவர்கள்
திரும்பி வருகிறார்கள்
தோற்றமின்றி
வெறும் அசதியாக

அழைப்பு ஒலி
ஒன்றே ஒன்று மட்டும்.
புழுக்கத்தில் திணறும் ஒலி,
அம்மாவுடையதா?
உள்ளறையிலிருந்து புறப்பட்டு
உள்ளும் புறமும்
அனைத்து அசதிகளுடனும்
புரண்டு கரைந்து
வரும் ஒலி

மாலை - செய்முறைகள்

மனசின்
அனந்தகோடிச் செய்முறைகள்
கிளர்ந்துகொள்கின்றன,
விடை என ஒன்றும் இல்லை
என்பதைச் சுட்டிய வண்ணம்

செய்முறைகள் வழியே புகுந்து
ரகசியமாய் உள்ளேறு

'மாலையின் ஒரு மூலையில்' *,
கடந்துபோன முகங்களிலிருந்து வரும்
புகை
அலைவு கொண்டிருக்கிறதா?
புகை தடவாத நிலங்களின் வழியே
உள்ளேறு

உள்ளேறு, உன் ஊற்றுத் துளைகளை
அடைத்திருக்கும்
அடைமொழிகள்
கரைந்து வெளியேறக்
காண்கிறாய் இதோ

இதோ உன் மொழியின்
பளீர்ப் பிரசன்னம்
மூடிக்கொள் கண்களை

வெளியிட்டு விடாத உன் பத்ரத்தை
உராய்ந்த வண்ணம்
பறந்துபோன பறவைகள்
மறுருசிக்காகத் திரும்பும்
திறந்துகொள் கண்களை

செய்முறைகள்
உயிர்த்து உலாவித் திரியும் வரம்பின்மையை,
உப்புப் பரியும் கோவில் சுவர்களை,
சலசல அரசிலைகளை,
ஈர மண்தரையில் பன்னீர்ப் பூக்களை,
நேரத்தை வாசனைப் படுத்தி உணரும் உன்னை --
நான் என்றே கண்டு நீ
திடுக்கிட்டு நிற்க நேரும் போது (மனசின்...)

"ஜே.ஆல்ஃப்ரட் புரூபிராகின் காதற்பாடல் -- டி.எஸ்.எலியட்" *

மாலை -- யாருமில்லா இரவு

யாருமில்லா இரவில்
நீண்டு உயர்ந்த தேக்குகள்
காட்டின் எல்லைக்குள்
நடமாடித் திரியும்

யாருமில்லா இரவுகள் அடர்ந்து
நெரிந்து கிடக்கும் கானகம்.
வெளிப்பட்டுத்
தம்மைக் கண்டுகொள்ளத் துடிக்கும்
தாபங்கள்

ஆயினும்
இந்தப் பரபரப்பிலும்
மெல்லென
நாவுக்கடியில்
திரளும் புரளும்
என் சங்கீதம்

இந்தப் பரபரப்பிலும்
வீட்டிற்குள்
செடிகளின் பகல்நேரப் பேச்சுகள்
இணைப்பு கழன்று
தம் ஆதி வடிவங்களில்
திளைத்திருக்கும்

நாவுக்கடியில்
திரண்டு புரண்டு
யாருமில்லா இரவுகள்
தம் ஆதி நடமாட்டங்களோடு

மாலை -- பாறைப் பிரதேசம்

மாலை சரசரவென
நுழைந்து கொள்கிறது

கனலும் எனது
அனைத்துத் தரைகளையும்
பனிப்புகை செலுத்திக்
குளிர்விக்கிறது

எங்கே போயினர்
வீட்டு மனிதர்கள்?
தேடவும் தோன்றவில்லை

எனது பாறைப் பிரதேசத்துடன்
தனித்து நான்

மலைக்குவடுகள்
குனிந்து கீழே இறங்க,
சாலையோரக் குழிகள்
குழியினின்றும் வெளியேற--

இதுவே
பதற்றம் தணிக்கும் பரவசம்

இதோ
பிறை பிறந்ததும்
எங்கெங்கிருந்தோ ததும்பி
வெள்ளம்
எனது பாறைப் பிரதேசத்தை
மூழ்கடிக்க இருக்கிறது

பிரதேசம் எதுவுமின்றி
நான் சூழ்ந்து நான்

இனி
இருக்கிறேன் என்பதில்லாத இருப்பு
இல்லை என்று
இருக்கும்

மாலை -- பாழ்

சீட்டி போன்ற
அந்தக் கூரிய ஓசை
குத்திச் செருகித்
தூக்கிச் சுழற்றியது என்னை

விர்ரென்று
வாடைக்காற்றும் கொஞ்சம்
சதையோடு போயிற்று

தெருவில் யாரும் இல்லை
பாழும் தெரு
அஸ்தமனம் தாண்டி
யாரும் இருப்பதில்லை

மங்கல் விளக்கொளிகளிடையே
செருகிக் கனத்துத்
தொங்கும் இருள்
ரணம் கனல எரிந்தது

இருத்தலின் நிமித்தம் --
தெருவும் நானும் என
இருத்தலே.
யுகத்தொலைவில் தெரிந்துகொண்டிருக்கும்
முகங்களுக்காகவோ
தோளை உரசிப் போகிற
தோள்களுக்காகவோ அல்ல

பாழும் வீட்டினுள் நுழைந்து
முடங்கிக்கொண்ட
பாழும் தெரு
--என்னைப் போலத்தான் நீ--
என்றது

வீட்டினுள்
சுழன்றுகொண்டிருந்தாலும்
மையக் கூர்மையின்
உறவற்ற பிணைப்பில்
பாழ்கண்டு
படிந்திருந்தது
எனது பாழ்.

மாலை -- எவைகளும் என்னவும்

மலைச்சரிவு மரச்செறிவிலிருந்து
பிறப்பு விவரமின்றி வந்தவைகளை
வீட்டு வாசலில் அமர்த்திப் பேசினேன்

என்னைக்
கரும்பச்சை நிறமும் அதன் நடமாட்ட வெளியும்
கவித்துக்கொண்டிருந்தன
0-0

எங்கள் எதிரே
கற்பிதங்கள்
விலகி ஓடி
எட்டச் சுழன்று
ரீங்கரித்தன
என் புத்தக அலமாரியில்
நான் இல்லாத நேரம்
வந்து குடைந்து செல்பவை
0-0

வாசலில் அமர்த்தி
எவை என்று தெரியாதவைகளோடு
என்ன என்று தெரியாதவற்றை
உக்கிரத்துடன் பேசியிருந்தேன்

எங்களின் பின்னே
மறையும் சூரியனின் மௌனம்
நிரம்பிக் கிடந்தது

பேச்சின் வலி,
சோகம்போல் தெரிந்த அழகு,
நாங்கள் என்ற நான் --
எதைப் பேசினேன்?

பேசினோம்

எங்களைச் சூழ்ந்து
எங்களைக் கவனிக்காமல்
மூசுமூசென்று தேம்பித்
தன்னைத் தணித்துக்கொண்டிருந்த
மாலை

கற்பிதங்களின்
கடையலுக்கு அப்பால்
எங்கும் நிறைகின்ற இன்மைகளோடு
ஒன்றித் தணிந்த
மாலை

மாலை -- சருகுகளடிப் பொழுது

சருகுகளினடியில்
புதையுண்டு
லேசாக மூச்சுமுட்டிய
சுகம்,
எல்லாவற்றாலும் தொடப்பட்டு
எதையும் தொட இயலாதிருந்ததன்
மருட்சி,
வலிக்காமல்
தொற்றிக் கிடந்த துக்கம்,
அறியாமையின் மீது
பதியப் பதிய
ஊர்ந்து திரிந்த பரவசம்,

பாட்டிமார் கண்ணிடுக்கில்
விரல் துடிப்பில்
சுருக்கங்களோடு கூடியிருந்த
எளிய அருமை ...

அருமையாய்க் கழிந்தது
சருகுகளடிப் பொழுது
0-0

மறதியின் மதிப்பு உணராமல்
அதன் அரைவட்ட மூடிக்குள்
உலகளாவியிருந்திருக்கலாம்

பெயர் தெரியாத பறவைகளின்
அந்திப் படபடப்புகள்
உடம்பை ஊடுருவிப் போயிருக்கலாம்

சிறுமணிகளின்
இடையறா ஒலிபோல் ஒரு கதகதப்பு
அஸ்தமனம் உதிர்த்த சருகுகளடியில்
படர்ந்திருக்கலாம்
0-0

எவரையும்
என்னையும்
நுழைய விடாதிருந்த
பிரக்ஞையின் வெற்றிடம்
மாலையின் தடவலில் இணங்கிக்கொள்ள

--அருமையாகவே கழிந்தது
சருகுகளடிப் பொழுது.

மாலை -- என் வடிவு

வானம் தெரியும் நடுமுற்றம்
மரக்கட்டிலில் நெருங்கி அமர்ந்து நாங்கள்

சமயலறைச் சுவருக்குப்போக மிஞ்சிய
கொஞ்சம் சிமினி விளக்கு வெளிச்சம்
எங்களருகில், பராக்குப் பார்த்துக் கொண்டு

அம்மா சொன்ன கதை
வழக்கம் போல
மெல்லிய திரைச் சீலைகளுக்குப் பின்னிருந்து
நிகழ்ந்து காட்டியது

திரவமாகித் ததும்பிய நான்

என்னிடம் இருந்ததால்
என் வடிவில் இருந்த நான்

மாலையோடு பேசித் தளிர்க்கும்
கதை
என் வடிவில் இருந்த கதை

யோசிப்பும் நின்றுபோன
மௌனம்
என் வடிவில் இருந்த மௌனம்.

மாலை -- ஆறுவயதில்

நடுவில் நான்
நீங்கள் சுற்றிலும்

பதற்றம் இல்லைபோலப்
பாவனை செய்தோம்

சந்திப்பின் தாங்கொணாத வதை.

நம்மைப் பிணித்தது ஒரு விதி
மாலைக் காற்றைக் கொண்டு

காற்றின் ஓரமாக
யாருக்கும் காட்டப்படாத
பாதைகள்
விரைந்தோடின;
என் விரல் ரேகைகளில் வந்து முடிந்தன

ஆள் புழக்கமற்ற என்
பாதைகளைக்
கிழித்துக் குதற
வேட்டைவெறி கொண்டிருந்தீர்கள்

பாறைகளை
ஊதி உருட்டித் தள்ளும்
என் மலைகளின் மீது
என் கனல் சுற்றிவந்தது

கனல் மீதேறவும்
கைகால் வீசினீர்கள்

என்ன தெரியும் எனக்கு
அந்த ஆறு வயதில்?

எனது தூரத்தைத் தாண்டிய பார்வையைத்
தொடராது விட்டுவிட,
சூழும் கிறுக்கல்களிலிருந்து விடுபட்டு
மையம் என ஒன்று இன்றி
இருக்க

என்ன தெரியும்?

கனல்மீதேறக்
கைகால் வீசிச்
சுற்றிலும் நீங்கள்
நடுவில் நான்

Wednesday, January 9, 2008

மாலை -- குழப்பம்

குழப்பம் என்றான் நண்பன்
எது அவனைச் சூழ்ந்து நெருங்கியிருக்கிறதோ
அதனை

ஊடுருவியபோது
உண்மைதான் அவன்கூற்று
என்று தெரிந்தது

அவன் வீட்டவர் வேறுமாதிரி.

பளபளவென்று நிச்சயங்களைத் துலக்கி
மாலை விளக்கொளியில்
மின்னச் செய்கிறார்கள்

இருள் கலவாத வெளிச்சம் பேசுகிறார்கள்

நூல் பிடித்து அமைத்த
மனசின் சந்திகளில்
உரக்கச் சந்தித்துத்
தழுவிச் சிரித்து மகிழ்கிறார்கள்

பார்க்கக் கண் தேவையில்லை,
பார்ப்பதற்கும் இல்லை
என்றிருக்கும் ஒன்றை,
மாலைச் சலனங்களிடையே
சிறு ஒலி எழுப்பித் திரியப் பார்த்ததாக
இமைகளைக் கவித்துக்கொண்டு
பரவசத்துடன் சொல்கிறார்கள்

சந்தையிலிருந்து திரும்பும் கால்களில்
சாமர்த்தியம்
வழிநிழலில் அமர்ந்து
முனைகள் சந்திக்க
வளையம் வரையும் கைகளில்
லாகவம்

புள்ளியிலிருந்து புள்ளிக்கு
இடைக்கணத்தில்
அபார துல்லியம்

யாரும் யாரும்
எதுவும் எதுவும்
தெளிவே அவர்களுக்கு;
குழப்பம் என்கிறான் நண்பன்

குழப்பம் என்கிறான்
மாலையின்
இறுகலுக்கும் இளகலுக்கும்
நடுவில் நின்றபடி

மாலை -- விலகல்

மீண்டும் மீண்டும் வாய்ப்பது
இதே திசை
எட்டிலும் பத்திலும் அடங்காத திசை

விலகலுக்கென்று உள்ள திசை

அகன்று கறுத்த
தனிமையின் மீது
திட்டுத் திட்டாக
முள்வெடித்த பசுமை

இப்போதுதான் -- சமீபகாலமாக
உருள்வதை நிறுத்திவிட்ட பாறைகள்
சிறுசிறு இடைவெளி விட்டுச்
செருகியிருந்தன
0-0

இந்த இடத்திலிருந்து
இந்த விதமாய்ப் பார்க்க
எல்லாம் --
பாறை பசுமை எதுவாயினும்
தம்மை விட்டு வெளியேறி
விலகிப் போவது
தெரிய வருகிறது

பொழுது துறந்து
அலையவும் திரியவும்
எங்கும் அடையாதிருக்கவும்
வாய்க்கிற திசை இதுதான்
0-0

முள்வெடித்த பசுமையும்
செருகியிருக்கும் பாறைகளும்
ஏதோ இது நிலம்தான் என்று காட்ட,

நிரந்தர விலகலில்
என்னை நீடிக்கவிட்டு
எல்லா நேரமும்
என் பின்--முன் வரும்
என் மாலை சொல்கிறது
இது ஏதோ திசைதான் என்று

விலகலுக்கென்று உள்ள திசை

மாலை -- காலியிடம்

உண்மை
தன் பழைய இடத்துக்குத்
திரும்பி வந்து விட்டது
எப்போதும் காலியாயிருக்கும் இடம்

அது இல்லாத இடம் எது
என்பது பெரியோர் வாதம்.
வாதம் தெரியாமல்
எவர் பேச்சையும் கவனிக்காமல்
இதையே கவனித்திருக்க நேர்கிறது,
திரும்புவதை, திரும்புவதை மட்டும்.

புழுதிப் படலத்தோடு மிதந்துபோகும்
இடைச்சிறுவர்கள்
பசியின் பார்வையில் எரியும் விறகு
கடைசி மஞ்சள் கிரணத்தின்
தயங்கிய மூச்சு
--எதுவாயினும்
என்மீது பட்டவுடன்
விலகிப் போகின்றன, கவனம் கவராமல்.

இடம் இல்லாதிருந்ததில்
இடம் பரவிக்கொண்டது,
காலியிடம்

வாசலில் தொடங்கி
வானம் அடங்கி
தான் இன்றி இருண்டு கிடக்கும்
மனசின் வெளிவரை
எங்கும்

காலியிடம் காலியிடம்

மாலை -- காட்டு மலர்ச்சி

திரியில் சுடர் இறங்கிக்கொண்டிருக்கிறது

கதைகள் தீர்ந்துபோயிருந்தன

முகங்களில் சூழலின் கனம்

மெலிதாக அசையும் வீடுகளும்
தடதடக்காது நகரும் தெருக்களும்

செயற்கைச் சுவாசத்துடன்
வாசற் கோலங்கள்

கூட்டித் தள்ளிய குப்பைகளிடையே
உப்பி ஊறிக் கிடக்கும் வார்த்தைகள்..

0-0

மறுபடி மறுபடி வருகிறேன்
எங்கும் போயிருக்காமலே

இங்கிருந்து
இங்குபோய்த்
திரும்பி
இதோ இந்த மாலையும்
பீடிகைகளின் மீது
பற்றிப் பிடித்து எரிகிறது

சடசடத்து எரிவதன்
புகைச்சுகம்
0-0

தீர்ந்துபோன கதைகளின் எல்லையில்
இருள் முயலும் ரகசியம் எது?

புரிபடவில்லை -- எனினும்
முயல்வது கண்ட கிளர்ச்சியில்
கண்ணீரில் தொடுப்பதற்கில்லாத
காட்டு மலர்ச்சி

அதுகொண்டு
ஒரு சிறு சைகையும்
எண்ணத் துகளும்கூட
இடையிடுவதற்கின்றி
ஒன்றாகிவிட்டோம்
நானும் மாலையும்

மாலை -- பயில

கிடை வரிசையில்
நிழல்கள் நீண்டு நெளிந்து
தடமின்றிப் புதைந்துவிடும்

இப்போது அவை
வேறு மொழியில்
வேறு தரைகளில்
அமிழ்ந்திருக்கும்

கரையோரத் தென்னைகளுடன்
நட்பு எளிமை துறந்து
ஆறு
தன் அந்நியம் கொண்டு இருளும்
திசைநினைவு
விடுபட்டு ஒடுங்கி
எது இறுதியோ அதைத்
தொட முடியாதெனத் துக்கித்துத்
துழாவிப் போகும்
0-0

உருவினுள் மறைந்து
உருவிழந்த
மாலையைப்
பயின்றுகொண்டிருப்பேன்

மணல் பிசைந்து
மாலையின் துடிப்பைக் கணிப்பேன்

பயில --
அரவமற்ற
என் மூலைகளினுள்
உறிஞ்சப்படுவேன்

மாலை -- த்வனி

நான் வெட்டவெளியாகுமுன்பே
என் தீர்மானங்கள்
கசிந்து வெளியேறிப் போய்விட்டதை
உணர்ந்தேன்
ஆ! மிகவும் நல்லது

அவசரமில்லாத
சிறிய ஓடைகள் நடுவே
கூழாங்கற்களின் மீது
என் வாழ்வை
மெல்லத் தவழவிட்டேன்

வீட்டு முற்றத்தில்
கூழாங்கற்களின் நடுவே
ஓடைகளின் சிரிப்போடு
வெளி-உள் அற்று
விரிந்துபோகும் என் வெட்டவெளி

0-0

விட்டுப்போன நண்பர்கள்
அர்த்தங்களைத் திரட்டிச் சுமந்து
வெற்றி உலா போகிறார்கள்
விளக்கு வரிசை மினுமினுக்க

உண்மையின்
அனைத்துச் சுற்றுவாசல்களிலும்
புகுந்து திரிந்து
திருப்தியில் திளைக்கும்
என் நண்பர்களுக்கு,

கிடைக்கும் இடைவெளிகளை எல்லாம்
தம் கையிருப்புகள் கொண்டு நிரப்பும்
அவர்களுக்கு

என் வெட்டவெளியைக் காட்டமாட்டேன்

0-0

வெறுமைப் பாங்கான
எனது வெளியில்
ஒளியும் இருளும் முரண்படாத
என் அந்தியின் த்வனி

த்வனியின் மீதில்
அர்த்தம் எதுவும் சிந்திவிடவும்
விடமாட்டேன்