Saturday, January 12, 2008

மாலை -- பாழ்

சீட்டி போன்ற
அந்தக் கூரிய ஓசை
குத்திச் செருகித்
தூக்கிச் சுழற்றியது என்னை

விர்ரென்று
வாடைக்காற்றும் கொஞ்சம்
சதையோடு போயிற்று

தெருவில் யாரும் இல்லை
பாழும் தெரு
அஸ்தமனம் தாண்டி
யாரும் இருப்பதில்லை

மங்கல் விளக்கொளிகளிடையே
செருகிக் கனத்துத்
தொங்கும் இருள்
ரணம் கனல எரிந்தது

இருத்தலின் நிமித்தம் --
தெருவும் நானும் என
இருத்தலே.
யுகத்தொலைவில் தெரிந்துகொண்டிருக்கும்
முகங்களுக்காகவோ
தோளை உரசிப் போகிற
தோள்களுக்காகவோ அல்ல

பாழும் வீட்டினுள் நுழைந்து
முடங்கிக்கொண்ட
பாழும் தெரு
--என்னைப் போலத்தான் நீ--
என்றது

வீட்டினுள்
சுழன்றுகொண்டிருந்தாலும்
மையக் கூர்மையின்
உறவற்ற பிணைப்பில்
பாழ்கண்டு
படிந்திருந்தது
எனது பாழ்.

No comments: