Saturday, January 12, 2008

மாலை -- எவைகளும் என்னவும்

மலைச்சரிவு மரச்செறிவிலிருந்து
பிறப்பு விவரமின்றி வந்தவைகளை
வீட்டு வாசலில் அமர்த்திப் பேசினேன்

என்னைக்
கரும்பச்சை நிறமும் அதன் நடமாட்ட வெளியும்
கவித்துக்கொண்டிருந்தன
0-0

எங்கள் எதிரே
கற்பிதங்கள்
விலகி ஓடி
எட்டச் சுழன்று
ரீங்கரித்தன
என் புத்தக அலமாரியில்
நான் இல்லாத நேரம்
வந்து குடைந்து செல்பவை
0-0

வாசலில் அமர்த்தி
எவை என்று தெரியாதவைகளோடு
என்ன என்று தெரியாதவற்றை
உக்கிரத்துடன் பேசியிருந்தேன்

எங்களின் பின்னே
மறையும் சூரியனின் மௌனம்
நிரம்பிக் கிடந்தது

பேச்சின் வலி,
சோகம்போல் தெரிந்த அழகு,
நாங்கள் என்ற நான் --
எதைப் பேசினேன்?

பேசினோம்

எங்களைச் சூழ்ந்து
எங்களைக் கவனிக்காமல்
மூசுமூசென்று தேம்பித்
தன்னைத் தணித்துக்கொண்டிருந்த
மாலை

கற்பிதங்களின்
கடையலுக்கு அப்பால்
எங்கும் நிறைகின்ற இன்மைகளோடு
ஒன்றித் தணிந்த
மாலை

No comments: