Saturday, January 12, 2008

மாலை -- பாறைப் பிரதேசம்

மாலை சரசரவென
நுழைந்து கொள்கிறது

கனலும் எனது
அனைத்துத் தரைகளையும்
பனிப்புகை செலுத்திக்
குளிர்விக்கிறது

எங்கே போயினர்
வீட்டு மனிதர்கள்?
தேடவும் தோன்றவில்லை

எனது பாறைப் பிரதேசத்துடன்
தனித்து நான்

மலைக்குவடுகள்
குனிந்து கீழே இறங்க,
சாலையோரக் குழிகள்
குழியினின்றும் வெளியேற--

இதுவே
பதற்றம் தணிக்கும் பரவசம்

இதோ
பிறை பிறந்ததும்
எங்கெங்கிருந்தோ ததும்பி
வெள்ளம்
எனது பாறைப் பிரதேசத்தை
மூழ்கடிக்க இருக்கிறது

பிரதேசம் எதுவுமின்றி
நான் சூழ்ந்து நான்

இனி
இருக்கிறேன் என்பதில்லாத இருப்பு
இல்லை என்று
இருக்கும்

No comments: