உயரமான கல்சுவருக்குப் பின்னால்
புழுதி படிந்த தென்னைமடல் மீது
குத்திச் சரிந்து
குவியலாய்ச் சூரியக் கதிர்கள்
கோடிக்கணக்கில் கைகால் முகங்களும்,
முரண்டு செய்து
உந்தி எழுந்த உக்கிரங்களும்
சோர்ந்த கதிர்களுடன் பின்னிச்
சுருண்டிருக்கின்றன
கனக்கத் தொடங்கும் மாலை
அவ்வளவு கனமும்
செறிந்து இறங்கிப்
பாதங்களில்
பாதங்களை நோக்கி இறங்கும்
இமையினுள்
நிலைகுத்திக் கிடக்கும் நிழல்கள்
சுழல்வதும் சுற்றுவதுமான
இயக்கங்கள்
நினைவிழந்துகொண்டிருக்கின்றன
கடைசி அந்தி போலும்
0-0
அசதி
காலையில்
இவ்வழியே போனவர்கள்
திரும்பி வருகிறார்கள்
தோற்றமின்றி
வெறும் அசதியாக
அழைப்பு ஒலி
ஒன்றே ஒன்று மட்டும்.
புழுக்கத்தில் திணறும் ஒலி,
அம்மாவுடையதா?
உள்ளறையிலிருந்து புறப்பட்டு
உள்ளும் புறமும்
அனைத்து அசதிகளுடனும்
புரண்டு கரைந்து
வரும் ஒலி
Saturday, January 12, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment