Saturday, January 12, 2008

மாலை -- மூடிவைக்கப்பட்ட மாலை

நேற்றுப் போலவே இன்றும்
காற்றே வீசவில்லை

தெரு இரைச்சலும் நெரிசலும்
மனித சலனங்களின்
அனைத்து உராய்வுகளும்
மாலைக்கு
வெளியேதான்
நிகழ்ந்துகொண்டிருக்கின்றன

இறுக
மூடிவைக்கப்பட்டிருக்கிறது
இந்த மாலை

நடுமுற்றத்தை வற்றச் செய்த
தனிமை
இனி என்பது இல்லாமல்
இருக்கிறது

மாலையின்
உறைந்த ஸ்வரங்களின் அருகே
தொடப்படாமலும்
தொடாமலும்
என் அம்சம் பலவும் பிரிந்துவிட்ட
நான்

மூடிவைக்கப்பட்டிருக்கிறோம்
நாங்கள்

காற்று வீசவிருக்கும்
இரவின்
அபத்த ஆசுவாசத்திற்கும்
வெளிச்சம் ஆபாசப்படுத்தும்
பகலின்
அசட்டுக் கவர்ச்சிக்கும்
நாங்கள் திறந்துகொடுக்கப் போவதில்லை

எட்டி நெருங்க முடியாதவாறே
நீங்களும் நாங்களும்

No comments: