Saturday, January 12, 2008

மாலை -- கதை

அந்தி விளையாட்டு
முடிகிறது
வாசற்படிகளில் பிள்ளைகள்
வந்து தளைப்படுகின்றனர்

பேச்சும் சிறு சிரிப்புகளும் விசிறி
மஞ்சளாய்க் கனல்கிறது மாலை

கதை மனிதர்கள்
ஆழங்களிலிருந்து
மின்னிக்கொண்டு
வருவதும் போவதுமாயிருப்பர்

ஏதேதோ அடுக்குகளிலிருந்து
ஏதேதோ அரூபங்கள்
பறந்து படிந்து மறையும்

காலத்துள் நிகழ்ந்திராத காலம்
தகதகத்து
பிள்ளைகளின் கண்களில் இறங்கும்

கதைகள் சற்றே வண்ணம் கலங்கி,
எனினும் உள்வெளிச் சஞ்சரிப்பில்
உயிர் சேகரித்துக்கொண்டு
பழைய இருப்பிலேயே
புதிது புதிதாகும்

எல்லாவற்றுடனும் இழைந்து
இருத்தலே
காத்திருத்தலாக
நான்

No comments: