Wednesday, January 9, 2008

மாலை -- காட்டு மலர்ச்சி

திரியில் சுடர் இறங்கிக்கொண்டிருக்கிறது

கதைகள் தீர்ந்துபோயிருந்தன

முகங்களில் சூழலின் கனம்

மெலிதாக அசையும் வீடுகளும்
தடதடக்காது நகரும் தெருக்களும்

செயற்கைச் சுவாசத்துடன்
வாசற் கோலங்கள்

கூட்டித் தள்ளிய குப்பைகளிடையே
உப்பி ஊறிக் கிடக்கும் வார்த்தைகள்..

0-0

மறுபடி மறுபடி வருகிறேன்
எங்கும் போயிருக்காமலே

இங்கிருந்து
இங்குபோய்த்
திரும்பி
இதோ இந்த மாலையும்
பீடிகைகளின் மீது
பற்றிப் பிடித்து எரிகிறது

சடசடத்து எரிவதன்
புகைச்சுகம்
0-0

தீர்ந்துபோன கதைகளின் எல்லையில்
இருள் முயலும் ரகசியம் எது?

புரிபடவில்லை -- எனினும்
முயல்வது கண்ட கிளர்ச்சியில்
கண்ணீரில் தொடுப்பதற்கில்லாத
காட்டு மலர்ச்சி

அதுகொண்டு
ஒரு சிறு சைகையும்
எண்ணத் துகளும்கூட
இடையிடுவதற்கின்றி
ஒன்றாகிவிட்டோம்
நானும் மாலையும்

No comments: