Thursday, January 17, 2008

இன்னொரு நான்

மௌனத்தின் கருவில் ஒரு
மாயகீதம் வளர்வதென
என் இதயத்தின்
நித்தியக் கருவாக அவன்
வளர்கிறான்

என்னுள் தோன்றி
என்னைப் புதிதாய்த்
தோற்றுவித்தவன் அவன்

சந்தனக் காட்டுச்செறிவில்
தென்றலின் அலைச்சல்போல்
என் கவிதைகளுள்
எப்போதும் அவன் அலைச்சல்

என் கனவுகள் எல்லாம்
அவன் உறக்கங்களில்

என் சுவடுகள்
அவன் பாதத் தூரிகைகளின்கீழ்

என் அந்தரங்கத்தின் வாசல்கள்
அவன் விழிகளில்

என் ஆழங்களில்
அவனையே நிரப்பியிருக்கிறேன்

என் கண்ணீரில்
அவனைப்
பளபளக்க விட்டிருக்கிறேன்

என் உயிர்ப்பூவில்
தேனாய் ஊறுகிறான்

நிறமற்ற என்வானத்தில்
நீலமாய் விரிந்தான்

எனக்குச் சிறகுகளைக்
கற்பித்தவன்
அவன்

கருகிப்போன
என் இறந்த காலத்தை
மறதியெனும் திரையாகி
மறைக்கிறான்

கருவிலிருக்கும்
என் எதிர்காலத்தை,
அவன்,
தன்னையே ஊட்டி
வளர்க்கிறான்

No comments: