Tuesday, January 1, 2008

தெளிவு

பிம்பங்களிலிருந்து
விடுபடவும்
என் மலயடிவார நகரின்
மாலைக்கற்று வந்து வருடவும்
சரியாயிருந்தது

என்றைக்குமில்லாமல் இன்று
பின்னணி ஓசைகள் இன்றி
முனகலின்றி
வந்து நின்றது இருள்

சாம்பல் நிறம் மாறுமுன்
விடைபெற்றுக் கொண்டது வானம்

சொல் அவிதலும்
இரவு அவிழ்தலும்
இசைவாகின

யாருடையதென்றிலாத
சோகம்
அரைக்கண் பார்வைபோல்
கிறங்கித் திரிந்தது

எதையும் தொட்டிராத
என் புதிய கைகள்
எங்கெங்கும் நீண்டு
எதையும் தொடாது
திளைத்தன

தனித்தலின் பரவசம்
அனுபவத்தின் கையிருப்பில்
அடங்காது
நழுவி
விரிவு கொண்டது

தெளிவு என்பது பொய்
என அறியாது
தெளிவைத் தேடிப் பிடிவாதம் ஏறிப்
பாமரப் பயிற்சிகளால் களைத்து மகிழ்ந்த
பழைய நாட்களை நினைத்துக் கொண்டேன்

No comments: