Tuesday, January 1, 2008

என்ற ஒன்று

சூன்யம் இருந்தவரை
எல்லாம் சரியாயிருந்தது

எதன் இல்லாமையையும்
சூன்யத்தில் அடக்கிச்
சமாதானப்பட முடிந்தது

ஏழுகடல் ஏழுதீவு ஏழுவானம் கதைகேட்கும்
குழந்தைகளுக்கு
இறுதியில் கிடைத்தேவிடும் சூன்யம்
என்ற
குறுகுறுப்பு இருந்தது

நாமும்
நீ நான் என்ற
அடையாளச் சிக்கலைப்
புறமொதுக்கிவிட்டு
நிம்மதியாயிருக்க முடிந்தது

கேள்விகள் வந்து
கொத்தித் தின்ன நின்றால்
நம்மைக் கொடுத்துவிட முடிந்தது
இல்லாமலாவது இருப்போமல்லவா
என்று

எதிர்மறைகளின்
இரைச்சலை
அமைதியாய்
ரசிக்க முடிந்தது

பூமியைத் தொடும் அடிவானத்திடம்
அலட்சியம் காட்ட முடிந்தது

தைரியமாக
விஷயங்களைப்
பகைத்துக் கொள்ள முடிந்தது
எப்படி இருப்பினும்
இவை போகமுடியாத இடம்
நாம் போக இருக்கிறது என்ற
நம்பிக்கையில்

சூன்யம் என்ற ஒன்று
இருந்தவரை
எல்லம் சரியாயிருந்தது

No comments: