பெருமூச்சின் கரிபடிந்து
பொழுது மங்கிற்று
அவன் கேட்டதும்
நான் சொன்னதும்
கனமற்றுப் போயின
வானம்
எப்போதும் போல்
இருளடித்துக் கிடந்தது
ஆனாலும்
மழைத்துளியுடன்
அரிதாரம் உதிர்த்தது
மனசுகள் உராய்ந்து
பொறிகிளம்பும்
எனினும்
பாறை இடுக்குகளில்
சிறகு தேய்ந்து
சிரமமின்றி அமர்ந்திருக்கக்
கற்றன
நினைவுகள்
அவரவர் கண்ணில்
ஆயிரம் காட்டி
அனாதையாய்
ஒடுங்கி மறையும்
அனுபவம்
வினாடியின் வாள்வீச்சில்
வெட்டுப்படும்
வாழ்க்கை
சாட்சியாய்ச்
சுற்றிலும்
நச்சு நச்சென்று பேசிப் புழங்குவர்
மனிதர்
உலாவி வருவன யாவும்
உண்மையல்ல என்று
மௌனம் சாதித்தோம்
எப்படியும்
கலங்கித் தெளிந்தபோது கண்டோம்
தெளிவும் ஒரு
கலங்கலேயாக
Tuesday, January 1, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment