Tuesday, January 1, 2008

COMMUNICATION

பெருமூச்சின் கரிபடிந்து
பொழுது மங்கிற்று

அவன் கேட்டதும்
நான் சொன்னதும்
கனமற்றுப் போயின

வானம்
எப்போதும் போல்
இருளடித்துக் கிடந்தது
ஆனாலும்
மழைத்துளியுடன்
அரிதாரம் உதிர்த்தது

மனசுகள் உராய்ந்து
பொறிகிளம்பும்
எனினும்
பாறை இடுக்குகளில்
சிறகு தேய்ந்து
சிரமமின்றி அமர்ந்திருக்கக்
கற்றன
நினைவுகள்

அவரவர் கண்ணில்
ஆயிரம் காட்டி
அனாதையாய்
ஒடுங்கி மறையும்
அனுபவம்

வினாடியின் வாள்வீச்சில்
வெட்டுப்படும்
வாழ்க்கை

சாட்சியாய்ச்
சுற்றிலும்
நச்சு நச்சென்று பேசிப் புழங்குவர்
மனிதர்

உலாவி வருவன யாவும்
உண்மையல்ல என்று
மௌனம் சாதித்தோம்

எப்படியும்
கலங்கித் தெளிந்தபோது கண்டோம்
தெளிவும் ஒரு
கலங்கலேயாக

No comments: