Wednesday, February 6, 2008

யாரென்று என்னவென்று

எனக்கு வந்த
பரிசுப் பொட்டலங்கள் ஒன்றில்
வெறும் காலியிடம் விரவிக் கிடந்தது
அனுப்பியவரின் சீட்டுக் குறிப்பு:
"உனது மறுபுறத்தின் சமிக்ஞைகளை
இத்துடன் அனுப்பியிருக்கிறேன்"

நண்பர்கள் கற்பனை வசப்பட்டவர்கள்

நேற்றுக்கூட இப்படித்தான்
வீட்டுவாசல் வெறிச்சென்றிருந்த
மதிய வேளையில்
வெயிலும் நிழலுமாய்ப்
பேசிக்கொண்டிருந்தேன்
எதிபாராது வந்து நின்ற
நண்பன் சொன்னான்:
"இதோ நீ இருண்டு கொண்டிருக்கிறாய்"

ஏதும் நினைவுகளற்று
நின்று கொண்டிருந்த
ஒரு தனியிடத்திலும்
ஒருவன் தோன்றிக்
குறியின்றிக்
கேள்விகளை வீசுகின்றான்

யாரென்று என்னை
நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்
யார்யாரும்?

விட்டுப்போன வலிகளும்
இதங்களும்
வேறெங்கோ இருந்துகொண்டு
தந்திரமாக
ஒன்று கூடியிருக்கலாம் என்று
நினைத்துக்கொண்டிருக்கும் போதே
நீ வந்து பேசுகிறாய்:

"நீ ஒன்றுகூட வில்லை
உன் சொல் ஒன்றுகூடவும் நாளாகலாம்
கூடாமலும் போகலாம்" என்கிறாய்

யாரென்று என்னவென்று
நினைக்கிறீர்கள்
எல்லாரும்

No comments: