Thursday, January 17, 2008

கோடரிகள்

கண்ணுக்குப் படாத
மனித நடமாட்டம்

கோடரிகளுடன்
காட்டினுள்
வெவ்வேறு முனைகளிலிருந்து
நுழைந்திருக்க வேண்டும்

திசையெங்கும்
பாய்ந்து சுழலும்
கோடரிகள்.
சரியும் மரங்களைச் சுற்றிக்
கசியும் பரிவு
(அளவான ஈரத்துடன்)

இலைகளும்
கதைகளும்
கூச்சலிட்டன

குறுக்கு நெடுக்காகக்
காடு முழுதும்
ஒலிகளின் குருட்டுப் பாய்ச்சல்.
பூமிக் கடியிலான மொழி
முறிந்தது போலும்

வழக்கமாக
ரத்த வாடையைக் கொண்டுவரும்
அதே காற்று
வந்து விட்டது

விடிவதற்கு இன்னும்
நேரமிருக்கிறது

No comments: