Thursday, January 17, 2008

மைதானம்

சிடுசிடுப்போடு
பார்த்துக்கொண்டிருக்கிறது
மைதானம்

வெயிலின்
திருகல் ஒலி
எங்கும் கேட்கிறது

கம்பிமுள் வேலியில்
அப்பாவித்தனம் படர்ந்து
ஓரிரு பச்சைக் கொடிகள்

ஓரமாய்
வரி நிழல் உறுத்தும் சாலை.
வகைவகைப் பாதச் சுவடுகள்
பல அடுக்குகளாக
0-0

மைதானம்
சலிப்போடு
புரண்டுகொடுக்கிறது
இருளின் ஊடாக வந்தடையும்
எல்லா முகங்களிலும்
ஒரேமுகம் உணர்ந்து.

எழுந்து அமர்ந்து
தனிமையின் ஒரேமுகம் தடவி
காலங்களைத்
துளைத்துப் போகும் ஒரு
பெருமூச்சை அயிர்த்துப்
படுத்துக் கொள்கிறது
0-0

பாதச் சுவடுகள் வதங்க
நீளமாய்ப் போன சாலை
இரவைப் பார்க்கத்
திரும்பி வரவில்லை

புழுங்கி வேகும் இரவு
மைதானத்தின் மூலையில்
ஒரு கழுவில் மாட்டி நெளிகிறது

No comments: