Thursday, January 17, 2008

அவன்

இது ஒரு திருப்பம்
திடீரென அவன்
எனக்குத் தெரிந்தவனாகினான்

மணல்தடத்தில் மாட்டுவண்டிகள்
எழுப்பிய ஓசையிலிருந்து
தோன்றினான்

சிந்தனையின்
சமவெளிப் பிரதேசங்களை விட்டு
வெகுதூரம் பிரிந்து வந்திருந்தேன்

நான் ஒன்றும் பிரயாணம் செய்பவனல்ல
எனினும்
என் இடம் ஒன்றல்ல
என்னைச் சூழும் பிரதேசங்கள்
மாறிமாறி வேறுவேறாகும் விநோதம்

விநோதம் பிளந்த ஒரு வினாடியிலிருந்து
அவன் வெளிப்பட்டான்

குறுகலான சந்துகளில்
எனக்குக் கிடைத்த என் சொந்த உருவம்
அவனப் பார்த்தபோது மங்கிப் போனதைப்
பின்னர்த் தட்டுப்பட்ட அனுபவமாக உணர்ந்தேன்

வாழ்வின் அணுக்களிடையே சீறும்
தனிமையின் விஷம்
எனக்குப் பழக்கமாகிவிட்டிருந்தது

இல்லாமையிலிருந்து
தோற்றங்கள்
எனக்கு வரத்தொடங்கியிருந்தன

வார்த்தைகள் வழங்குவதையெல்லாம்
மறுத்துக்கொண்டே கடந்து
கடைசியில்
எந்தச் சுரங்கத்திலும் நுழையாமல்
இருந்த இடத்தில்
திரும்பவே நேர்ந்தது
வார்த்தைகள் இப்போது
கற்படிவங்களாய்க் கிடந்தன

கற்படிவங்களின் வெற்றியை நகைத்து
அவன் தோன்றினான்

No comments: