Wednesday, January 9, 2008

மாலை -- பரட்டை

நெறுநெறுவென்று பேசும்
ஆடிமாதம்

கூரைகள் பறக்கும்; கூடவே
கூரைகளின்கீழ் நெரிந்து கிடந்தவை
என்றும் பேசியிராததைப்
பேசிப் பறக்கும்

செம்புழுதி கலந்து சிவக்கும் என்
சுழற்சிகள்
கண்காதுகளில் நிறைகின்றன
00
ஒருதுகள் மிஞ்சாமல்
பறந்து போய்விட்ட
முதிய பொட்டல்வெளி
மெல்லிய இருள் விரித்து,
'அமர்ந்து பேசலாம் வா'
என்கிறது

பரட்டையாய் வறண்ட மாலை
இட்டுச் செல்கிறது
நான் திரும்பும் போதெல்லாம்
வழிவிட்டு விலகி

'முன்பின்கள் கலைந்து
முறை என்று ஆகிய பரப்பின்மீது
சொல் கலைத்து வீசிய சூறையை
அளைந்து பேசுவதற்கா?
வரமாட்டேன்'

ஆயினும்
பரட்டையோடு மட்டும் பேச்சு
எனக்குண்டு
சுத்தமாய் வெறுமையாய்க்
குருட்டொலிகளால் ஆன பேச்சு
00

குருட்டொலிகளின்
அலைவீச்சில்
யுகயுகமாய்ச் சேகரமான
வேறொரு
கருமணல் விரிவு

கலையாதிருப்பது
கருமணல் விரிவு மட்டுமே

No comments: