Thursday, January 17, 2008

உள்பகை

உடல்முழுதும்
என்னுள்ளிருக்கையிலேயே
உன்விரல் மட்டும்
எனக்கெதிராய் நீள்வதெப்படி?

ஓயாத என்`திரிகையில்
வெறும் மாவாயிருந்து
என் உருவையே திருடிப் போர்த்து
எனக்கெதிராய் விரல் நீட்டினாயா?

நீட்டாதே; அது
என் கண்ணுள்போய்க்
கால்வரை துழாவுகிறது

இருட்டை மீறிச்சீறும்
விரலின் வெறிப்பில்
வெளிக்கோடுகள் மூட்டுவிட,
உள்ளிருக்கும் அலறல் எல்லாம்
அகண்டத்தில் தூசாய்ப் பரவும்; நான்
லேசாகிப் பறந்து
மௌனத்தின் விழிகளில்
பூவிழுவேன்; வேண்டாம், நீட்டாதே!

இங்கு இப்படித்தான்,
சட்டம் நேராயிருக்கவே
ஓவியம் தலைகீழாய்,
இடவலமாய்,
முன்பின்னாய்,
நிறம் மாறியும்,
குணம் மாறியும் ...

ஆமாம், இங்கு இப்படித்தான்
கீறல்களின் வழியே
இடிமுழங்கும் கண்ணாடிக்கு --
சமயங்களில் --
அதனுள் பிறந்தழிந்த
பிம்பங்களின் நினைவுகள் ..
நினைவுகளை
ஒட்டுக் கேட்டாயோ நீ?

வேம்பின்கீழ்
போதி நிழல் படிவது
கண்டு அதிசயிக்கிறார்
இவரெல்லாம்

அறிவேன்
கண்கள் எவையும்
என்னைச் சுற்றுவது
என்முகம் திறந்து
உன்முகம் தேடவே

நசுங்கி நெளிந்து நீளுமென்மூச்சில்
உன்குரல் பழுவை
இவர்கள் அறிவார்கள்

உன் நாவைப் பறித்து, என்
காதுள் ஒளித்தேனோ?
உன் விரல் சூட்டுக்கோலை, வெறும்
கண்ணீரால் குளிர்விப்பேனோ?

வேண்டாம், நீட்டாதே
நீட்டிய விரலின்பின்
நியாயங்கள் நிற்கின்றன

No comments: