Tuesday, January 1, 2008

அபத்தம்

ஆவேசம் திரிந்து
அபத்தமாக உருக்கொண்டது

ஒலிஒளிக் காட்சி முடிந்து
நினைவு எதுவுமின்றித்
திரும்பும் கூட்டம்

இலைபூ பறவைக்கூடு என்ற
பேதம் மரத்து
மழுங்கி நின்றன
சலையோர மரங்கள்

இலக்கு மறந்து
எதிர் எதிர் பாய்ந்து
தன்னைத்தான் முட்டிக்கொண்டு
கல்லாய் நின்றது
காற்று

புலன்களிடையே
இடைவெளி நெடிதானது

இடைவெளியில் புரண்டு
சாம்பல் மணக்கக்
கிடந்தது இரவு

மூளையின் அறைகளுக்குள்
அசடு கனத்தது

வெட்ட வெளியில்
முன்னால் போகவும்
பின்னால் போகவும்
ஒரே நேரம் அடியெடுத்து வைத்தபோது
நான் பார்த்தது:

ஆகாயம் நோக்கிக்
கைகளைத் தலைகளை ஆட்டிப்
பேசத் தொடங்கினர்
ஆணும் பெண்ணுமாய்
அறுபது எழுபதுபேர்
வெவ்வேறு நிலைகளில்
உட்கார்ந்தபடி

வெளிச்சம் இளித்தது

No comments: