Tuesday, January 1, 2008

இன்று

இன்று
நீ வரவேண்டிய நாள்
எனினும்
வரமாட்டாய்

ஓடிமறைகையில் மட்டும்
புலனில்படும் சாயைகள்
இப்போதெல்லாம்
மங்கத் தொடங்கியிருக்கின்றன
அவை நிகழ்ந்த இடம்
நிரம்பும்
எளிய கேள்விகளால்

எங்கிருந்தோ
எங்கோ தொடர்புற்று
விஷயங்கள் பாய்ந்தோடும்

சரி
இம்முறை
பள்ளத்தாக்கில்
பனியின் மிச்சம் அதிகம்

இருண்டு இளைப்பாறும் மாலை
கருங்கல் படியில் சாய்ந்து
பக்கத்து மலைத்தொடரில் லயித்து
நான்

இன்னும் சிறிது பொழுதில்
இருளின் அணுக்களைத் தொற்றிக்
காட்டுச் செடிமணம்
வந்து உறைக்கும்

த்வனி எதுவுமற்ற
முரட்டுப் பிரவாகம்
திடுமெனச் சூழ்ந்து கொள்ளும்

எப்போதும் போல்
பார்வையின் ஆரம்பமுனை
இடம்பிசகும்
நானில்லாத இடத்திலிருந்து
தொடங்கிக் கொள்ளூம்

வரமாட்டாய் நீ
எனினும் இன்று நீ
வரவேண்டிய நாள்

No comments: