Saturday, December 1, 2007

வயது

ஒருநாள்
தரை காணாமல் போனபோது --
சுருங்கி வற்றிச் சுண்டிக்
காணாமல் போன போது --

பின் வாங்கிப் போகுமுன்
திசைகள் துப்பிப்போன
சூன்யம்
என்னை அப்பிக்கொண்ட போது --

ஒரு மாதிரியாய்த் திரிந்தேன்

பெரிய முதுகு வளைத்து
வியர்த்த தலைகுனிந்து
உரத்த குரல்போல யாரோ
பார்த்தார் என்னை

சிரித்தார் நீலம் பீறிட

'ஒஹோ
தப்பிப்
பின்னோடப் பார்க்கிறாயோ?
பிரிந்து கழன்று
விரைந்தது நீயன்றோ
எனினும்
நீ நீத்துவந்த வயதுகள்
வினாடிகள் மொய்த்து --
விட்ட இடத்தில்தான் மிதக்கும்
போய்க் கூடிக்கொள்'

திரிந்தபோது கண்டேன்
வெயிலுறிஞ்சி வெளுத்த தெரு;
வாசற்படியில்
வாயில் விரலுடன்
நின்றது குழந்தை
வீடும் வாய்திறந்து
குழந்தையை விரலாய்ச்
சப்பி நின்றது .. .. ..

கண்களை மூடிக் கொண்டேன்
மூடிய இமைகளுள்
முலைக்காம்பின் உறுத்தல்

இன்னும் அவர்
நரைத்த தலைகுனிந்து
நீலம் பீறிடச் சிரித்தார்

பார்த்தால் --
அவர் முகரேகைப் பின்னல்
குழந்தையின்
கண்ணில் நெளிந்தது

No comments: