Monday, December 24, 2007

பிரிவினை

வார்த்தைகள்
பிறந்த மேனியிலேயே
பிரிந்து தொடர்பற்று
எங்கேனுமொரு
அனாதை ஆசிரமத்தின்
சவ்வுக்கதவு தட்டும்

கால்கள்
திடுமென விழித்துக்கொள்ளும்;
அடிவான் மறைந்து
அங்கே
காரியம் கவிழ்ந்து
காரணத்தைக் கூடிக் கலந்து
இரண்டும் ஆவியாகித் தொலைவது
கண்டு
திடுக்கிடும்;
சுற்றிச் சூழ்ந்த
நார்க்காட்டிடையே
இரண்டு நாக்குகளையும்
உதறி எறிந்துவிட்டுப்
படுத்துக்கொள்ளும்
தம் அடையாளம் மறந்து

கடித்துக் கவ்விய காம்புகளுடன்
கடைவாயில்
பால்கலந்து ரத்தம் வழிய
கன்றுகள்.

கன்றுகள்
பிரளயமாய்க் குரலுடன்
இருளுடன்.
தாயாக உன்மனம்
தனிக்கும்

இருந்தும் எப்படியோ
உருவம் சுமந்து
இடந்தோறும்
கணந்தோறும்
நிறுத்திவைத்து

மேலும் மேலும்
உருவம் சுமந்து
போகிறாய்

உன்னைப் பிரிந்து விலக்கிக்கொண்டே
உன்னைத்தேடி
உன் தவம் மட்டும் உடன்வரப்
போகிறாய்

உன் வற்றலிலிருந்து
கெட்டியாய்ச் சொட்டிவிடும்
காலத்தின்
கடைசிச் சொட்டு

கணம் உலரும் அக்கணம் - -
கண்ணில் ஒரு படலம் கிழிய
வாலைச் சுழற்றி
ஆங்காரமாய் அடித்துவிட்டுப்
புற்றுக்குள் விரையும்
பெயர் உரித்த
ஒரு பசி

நீ உன் தவமும் கலைவாய்

No comments: