அசட்டு ஒளி
பிஞ்சில் வெம்பிய தன் நிறங்களைப்
பிதுக்கிப் பார்த்துச்
சிரித்திருந்தது
மண்ணில் மூழ்குதல்
உறிஞ்சு பாறைகளிடை
உரமிழத்தலே
என்று
வாடிக்கையாயிற்று
நின்ற இடத்தில்
நின்று கொண்டே
ஓயாத பயணம்
அபத்த மென்பதில்
சிரிப்பும் மூண்டது
பின்
சட்டென்று ஒருநாள்
என்னையறியாமலே
இதனிடம் ஒப்புவித்தேன்
என்னை
இளம் சூடு
கண்முன்
தொனிகளின்
மயக்கு வடிவங்கள்
சுற்றிலும்
நூறுவருஷ நீளத்துக்கு
இதன்
ஸ்பரிச சுகத்தில்
அரூபமுற்ற
சுருதி
மூச்சடக்கி ஸ்தம்பித்த
வினாடி நுனியில்
திசையற்று நீண்ட கரங்களில்
நான்
புலன் பூட்டுடைத்து
மிருது மூர்க்கமாய்
உள்நுழைந்து
உருவம் உருவிச்
சுருட்டி எறிந்துவிட்டு
என்னைத்
தன்மேலொரு
படலமாக்கிப்
படர்த்திற்று
மெளனம்
Saturday, December 1, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment