Saturday, December 1, 2007

மருந்து

அசட்டு ஒளி
பிஞ்சில் வெம்பிய தன் நிறங்களைப்
பிதுக்கிப் பார்த்துச்
சிரித்திருந்தது

மண்ணில் மூழ்குதல்
உறிஞ்சு பாறைகளிடை
உரமிழத்தலே
என்று
வாடிக்கையாயிற்று

நின்ற இடத்தில்
நின்று கொண்டே
ஓயாத பயணம்
அபத்த மென்பதில்
சிரிப்பும் மூண்டது

பின்
சட்டென்று ஒருநாள்
என்னையறியாமலே
இதனிடம் ஒப்புவித்தேன்
என்னை

இளம் சூடு

கண்முன்
தொனிகளின்
மயக்கு வடிவங்கள்

சுற்றிலும்
நூறுவருஷ நீளத்துக்கு
இதன்
ஸ்பரிச சுகத்தில்
அரூபமுற்ற
சுருதி

மூச்சடக்கி ஸ்தம்பித்த
வினாடி நுனியில்
திசையற்று நீண்ட கரங்களில்
நான்

புலன் பூட்டுடைத்து
மிருது மூர்க்கமாய்
உள்நுழைந்து
உருவம் உருவிச்
சுருட்டி எறிந்துவிட்டு

என்னைத்
தன்மேலொரு
படலமாக்கிப்
படர்த்திற்று
மெளனம்

No comments: