Saturday, December 1, 2007

காற்று

அலைகளைச்
சிக்கின்றி வாரிய காற்று
கரைமீது
என்னை விசாரித்தது

வெறிப்பு மாறாமலே
சூரியனைக் கைகாட்டினேன்

நீலத் தகிப்புடன்
கண்சிமிட்டி
என்மேல் ஊசிகள் எய்தான்

தரையாய்
அகன்று விரிந்து படுத்துப்
புரண்டு
உருத்தெரியாமல்
காற்றை நசுக்கினேன்

ஓ ஒ ஒ ஒ வென்ற
அலையிரைச்சல் பாய்ந்து
என்னுள்
கற்கள் நீர்த்துப்
புகைந்தன

0

யாருக்கும் நான் சொல்வது:
'பாம்பை முழுங்கினால்
பெருமூச்சு விடவும்
படம் விரிக்கவும்
சட்டை உரிக்கவும்
மறுபடி பாம்பை
முழுங்கவும்
தெரிந்து கொள்வாய்'

0

ஒருநாள்
கூந்தல் இழைகளிடை
காற்று
பிணங்களை
இழுத்துக்கொண்டோடியது

வியர்வை புலர்ந்த
புறங்கழுத்தின் உப்பைத்
துண்டால் துடைத்தேன்

No comments: