Monday, December 24, 2007

வலி

தார் இளகிப்
புகை நெளிந்தது

புதைந்து மறைந்ததுடல்

இரவுதான்

மூட்டுக்களுள்
இடைவிடாது துருவிக்குடையும்
பிசிறு பிசிறான அலறல்
சுவர்க்கோழி?

கிசுகிசுக்கும் வெளிச்சத்தைக்
கலக்கி
இருட்டிவிட்டு
வரும் சலனம் - - தூரத்துக்குரைப்பு,
முதுகுத் தண்டில்
பல்தீட்டும்
ஓநாய்க்கு வந்த
கேள்வியா பதிலா?

மூளைப் புதரிலிருந்து
சீறிச் செல்லும் பாம்புகளை
மூலை முடுக்குகளில்
மறைந்திருந்து
குத்திச் சுருட்டுகின்றன
வேட்டைக் கரங்கள்

குறுகிய தெருக்களில்
ரத்தத்தின் சங்கீதத்தை
வெட்டி, நசித்து
ஓடுகின்றன,
மூட்டைக்கனம் தாங்கும்
திருட்டுக் கால்கள்

நிசப்தத்தின்
சவ்வு கிழித்துப் பாய்ந்த
தோட்டாத் துளைகள்.
துளைகள் வழி வழிவது
நசுங்கிய கண்களின்
புலம்பல்

வலி
வலி
வலி

வலி

No comments: