நடக்கும்போதே ஒரே நொடியில்
ஒரு கோடாய் மாறித்
தெருவில் நடப்பது
பேச்சுக் குரல்களின்
மடியில் பதுங்கி
அவை உறங்கினபின்
பசியுடன் வெளியேறுவது
பரவிப்பெருகிய பகலில்
கூடிப்பேசி மோதும்
இமைகளின் இடையே
நறநறத்து அறைபடுவது --
இவை வருத்தம்தான் எனிலும்
பெரிய வருத்தம்:
போகும் வழியெங்கும்
சுருண்டு கீறலுற்ற
கிறுக்கல்களுக்கிடையிருந்து
முகம் நிமிர்த்தித்
திருப்திப்புன்னகை தெரிவிக்கும்
பாமரனைச்
சந்திக்க நேர்வது
இடம் ஒழித்து வைத்துப்
பெயர் சொல்லிக் கூப்பிட்டதும்
தொலைதூரத்து மலையிடுக்கில்
தீபம் அசைத்து மறையும்
உருவிலிகள்
ஒன்றுகூடப்
பிடிபடாமல் போவது
இப்படியாயிற்றே என்று ஓடிக்
காற்றில் கரைந்துவிட முனைந்தால்
காற்றும் சதைபூசி
வண்ணம் போர்த்து
செருப்புக்கு ஆணிதேடி
அலைவது
கீழ்க்கல்லும் மேற்கல்லும் உரசிப்
பொறிசெய்து என்
திரிகொளுத்தி வலம்வருகையில்
கர்ப்பகாலத்திலேயே
என் வயிற்றுள்ளிருந்த
இருட்டுப் பிசாசு
அலறுவது
Monday, December 24, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment