Saturday, December 1, 2007

குருட்டுச் சந்து

குருடாய் முடிவுற்றது சந்து
அசடு வழிந்து திரும்பினேன்

பம்பரம் சுழற்றும் பையன்கள்
சிரித்தார்கள் லேசாக

அருகில் ஏதோ வீட்டில்
தந்தியைப் பிரிந்து
கூர்ந்து கூர்ந்து போய்
ஊசிமுனைப் புள்ளியுள் இறங்கி
நீடிப்பில் நிலைத்தது
கமகம்

உடல் உளைந்து
பெருமூச்சு விட்டபின்
தோன்றியது:
'ரத்தம் எப்போதும்
குருட்டுச் சந்தில் சுமையிறக்கித்
திரும்ப வேண்டியதே'

கோலங்களை மிதிக்காதிருக்கக் குனிந்து
தோரணப் பச்சை
கடைக்கண்ணில்
சந்தேகமாய்ப்பட நடந்து
சாலையை அடைந்தேன்

எதிரே
அடர்த்தியாய் மினுமினுப்பாய்
ஒரு கல்யாண ஊர்வலம்,
வானம் கவனிக்க

No comments: