Saturday, November 24, 2007

குரல்கள்

தொலைதூரத்தில்
குரல்கள்.
தொடநீளும்
பிளந்த நாவுகள்போல்

எனினும்
எட்டாதிருக்கிறேன்

தூக்கம் கலைந்து
திடுக்கிட்டெழுந்து
உட்கார்ந்தால்
இரைச்சல்கள்
முட்டிமோதி வருவதெனக்
காணும்

விலக்கிவைத்தால்
விடுமா என்னா?

கசப்பு இனிப்பு வெறுப்பு விருப்பு
அன்பு....
நானேயிட்ட பெயர் சுமந்து
முத்தமிட்டு முத்தமிட்டு
என்னை உறிஞ்சியவை. .

விலக்கித் தனித்தபின்
வேஷம் வெளுத்து
கிழிக்கும் குரலாய்த்
தொடரும்.

சமயங்களில்
கனவின் நிலைப்படியிடிக்கப்
பொறிகலங்கி
வெளி நின்று
சுவர் நடுங்க
உறுமிப் போகும்

தூரம் கருக்கிப்
புகை ஏவி
சூழ நின்று சிரிக்கும்

என் தோட்டத்து
வாய்மூடி அரும்புகளைக்
குதறிப் போகும்

நாக்குத் தள்ளிய தலைகளை
மேய்த்துக் கொண்டே,
போகுமிடமெங்கும்
பின்தொடரும்

எட்டாதிருக்கிறேன்
எனினும்
குரல்கள்

No comments: