Saturday, December 1, 2007

நினைவின்மை 1

கொஞ்ச நாளாய்
நார்க்காட்டில் அடிக்கடி
சிக்கிக் கொள்கிறேன்

என்ன தடவியும்
முள் அகப்படாது

எங்கிருந்தோ தகிக்கும்
நெருப்பின் திசை
தெரியாது

குதறும்
சப்தத்தின் ஆவேசம்
வெளிக்கோடு உணர்த்தாது

சலிக்கச் சலிக்கப்
படலங்கள் புரட்டிக்
காற்றின் விளிம்பு
கண்வரை வந்து உறுத்தும்

சே என்ன இந்த
நச்சரிப்புகள்

நின்று
தடவிக்
கண்மூடி
கோடிகோடியாய்ப் பிரியும்
நார்களை
மீட்ட, மீட்டலில்
எழுந்து மொலுமொலுக்கும்
விரியன் குட்டிகள்

காட்டையே
நூலுருண்டையாய்ச் சுருட்டி
எறிந்துவிட்டால்
நிற்பது நடப்பது
தேடுவது காண்பது
இல்லைதான்
0
சலசலப்புகள்
ஒழிந்தபின்
சங்கீதக் கச்சேரி
கேட்கலாம்தான்
0
எறிந்தாலும்
இந்த வினாடிவரை
எழுந்து மொலுமொலுத்துக்
கால்சுற்றி என்
தோலாகிவிட்ட
இவைகளை
உதறுவதெப்படி


எப்படி

No comments: