Sunday, November 11, 2007

மாலை - ஊர்

வேட்டைக்குப் போனவர்கள்
திரும்பி வருகிறார்கள்

மான் முயல்கள் வேறேதோ பிராணிகளைச் சுமந்து --
விசுவாச வாலசைப்புகள் பின்தொடர,
தாரை தப்பட்டை முழங்க,
பந்தங்களின் வெளிச்சத்தில்
எவர் வெற்றியிலோ எவரெவர் சோர்வுகளோ
மழுங்கித் தெரிய.

0000

மாலை நேரம் சுறுசுறுப்படைகிறது
இருந்த இடத்திலேயே.
முடிவின்மையின் சேமிப்புக்கு
ஒரு புள்ளியைப் பிரித்துக் கொடுக்கிறது

0000

சிறுவர்கள் என்ற எங்களின்
விளையாட்டினுள் நுழைந்து
வியர்வையைச் சீண்டிய
விநோதக் கனவு மயம் .. .. ..

0000

இருள் பூசப்பூச
மரங்களும் கூரைகளும் குட்டிச்சுவர்களும்
முகங்களும் அவற்றின் உரையாடல்களும்
கனத்து
யுகாந்தரங்களின் ரகசியம் அழுந்தி
மயங்குகின்றன

ஊர் மேடிட்டுக் கொள்கிறது
யாதும் ஊர் ஆகிறது

பகல்வேனிலின் சீற்றம்
அலறிப் புடைத்த ஆவேசம்
மூலைகளை மோதி அசைத்த காற்று
யாவும் ஊர் ஆகின்றன

பொழுதின் நினைவும்
நினைவின் பொழுதும்
இடைச்சுவர் தகர்ந்து
ஒன்றினுள் ஒன்றாகி
ஊர் ஆகின்றன

பேசுவதற்கு என்ன இனி
தணிந்தடங்கிய யாவும் இதோ
ஊர் ஆகின்றன

உலக உருண்டை உருவிலகி
ஊர் ஆகிறது

ஊர்
தன் மிகச்சிறிய புள்ளியில்

No comments: