Saturday, November 24, 2007

அந்தர நடை

வழியனுப்ப நீ
வந்தாலும்
வாசல் இருட்டில்
உன்முகம் தெரிவதில்லை

உன்
நிழல்குரலும்
வெறும் அசைவன்றி
வேறொன்றும் உணர்த்துவதில்லை

உன்
சூழல் அணுக்களோ
உருக்காட்டுமுன்
உருமாறும்
ஓயாமாறிகள்

பிரபஞ்சத் தூசிகளை
மூச்சிடை உள்ளிழுத்து
வெளியை
ஒரு சிரிப்பில் சுருட்டி விரிந்த
சூன்யத்தில்
நீ நான் நம்மிடை
விறைத்தோடிய மெல்லிய கோடு.

கணத்தின் சிறுதுகள்.

பிரமிப்பில்
பிரமிக்கவும் மறந்து
உன்னுடன் கைகோத்து
இடைக்கோட்டில்
அந்தர நடை பயின்றது

உண்மைதான்

எனினும்
நம்பச் செய்வது --
இல்லை --
நம்புவது எப்படி

No comments: