Saturday, November 24, 2007

நிசப்தமும் மௌனமும்

நெடுங்கால நிசப்தம்
படீரென வெடித்துச் சிதறியது

கிளைகளில் உறங்கிய
புழுத்தின்னிப் பறவைகள்
அலறியடித்து
அகாத வெளிகளில்
பறந்தோடின
தத்தம் வறட்டு வார்த்தைகளை
அலகுகளால் கிழித்துக் கொண்டே
0

விடிவு
நினைவுகளையும்
நிறமழித்தது

'நெடுங்காலம்' கடுகாகிக்
காணாமல் போயிற்று

சுருதியின்
பரந்து விரிந்து விரவி...
இல்லாதிருக்கும் இருப்பு
புலப்பட்டது
மங்கலாக

சுருதி தோய்ந்து
வானும் நிறமற்று
ஆழ்ந்தது மெத்தென

பூமியில்
ஒலிகளின் உட்பரிவு
பால்பிடித்திருந்தது
வெண்பச்சையாய்

No comments: