Wednesday, February 6, 2008

தோல்வி

தோல்விக்குப்பின் வந்த நாட்கள்
கலவரப் படாமல் கடக்கின்றன

அலையடங்கிய நீர்ப்பெருக்கின்
மேலாக
மெல்ல நடந்துசெல்வதில் சுகம்

பழக்கமில்லாத தாவரங்களுடன்
ஜீவராசிகளுடன்
வழக்கில் இல்லாத வார்த்தைகளுடன்
தனியே விடப்பட்டிருப்பதில்
ஆறுதல்

வாசனை எதுவும் இல்லை
சுவாசம் சிணுங்காமல் போய்வருகிறது

சாம்பல் நிறம் மட்டும்
மெருகேறியிருக்கிறது
வேறு நிறங்கள் இல்லை

பார்ப்பவைகளுடன்
பார்க்க முடியாதவைகள்
பிரித்துணர முடியாதவை
ஆகிவிட்டன

மனசின் மேய்ச்சல் நின்றுவிட்டது

இந்தத் தருணங்களின்
விளிம்பிலிருந்து
எட்டிப் பார்க்கையில்
செய்தி ஒன்றும் தெரிவிக்காத
அமைதிப் பள்ளத்தாக்கு


No comments: