Sunday, December 30, 2007

சித்திர கூடம்

கதவு திறந்து
உள் நோக்கினேன்

சித்திரங்கள்
ஒன்றனுள் ஒன்று
நகங்களால் கிறுக்கின

கதவை
இறுகப் பற்றி நின்றேன்

பேச்சுக்கள்
நொறுங்கிப்
பரற்குவியல்

பூரணத்துவத்தைத்
தோண்டியெடுக்க
வெட்டிய பள்ளங்கள்
எங்கும்

சித்திரங்களின் சிரிப்பு
சிரிப்பு
சிவந்து கனலும் அலறல்

தம் ஒலங்களில்
தம் நிறம் முழுவதும்
கரைத்துப் பாய்ச்சும்

ஆயிரம் வருஷங்களைச்
சாலையாய் நீட்டச் சொல்லி
ஓரடி வைத்தவுடன்
உடல் தெறித்து விழும்

'சூரியன் உறங்கிற்றோ?'
கிள்ளிப் பார்க்கும்

சூரியன் உதிர்த்த ப்ரக்ஞை
கணங்களாய் ஊரும்
நாற்புறமும்

உருவம் வேண்டி
கணங்களிடம் இரக்கும்
ஓவியங்கள்

சூழவும் உரசி உரசிக்
காற்றைச் சிராய்த்துப்
புண்ணாக்கும் சில ...

ஒத்தி ஒத்திக்
கண்ணீர் தடவி
ஆற்றவரும்
சில ..

மூலவெறி சுமந்து
நரம்பு விறைத்தெழச்
சுவர்களைச் சுரண்டிச்
சதைமணக்க
மூச்சயிர்க்கும்
சில ...

குருட்டு வெளிச்சத்தில் கூசிக்
கண்மூடிக் கொண்டு
உள்கதவை நோக்கி
விரல் சுட்டி

நம்பிக்கையோடு
அமர்ந்திருக்கும்
மிகச்சில

              0

எல்லாம்
நெரிசலில்
நெரிசலை
மறந்து போகும்

அனுபவங்களைத்
தமதாக்க
ஒன்றையொன்று
தழுவிச்
சண்டையிடும்

சண்டை
சப்தங்கள் கீறிய வடு
உயிர்த்து அலறச்
சண்டை

பின்
தம் எல்லையின்மையில்
கொளுத்தி
ஒன்றன்மேலொன்று
பந்தங்கள்
எறிந்து விளையாடும்

அவற்றின்
பேதைக் குழந்தைகளோ
உப்புப் பனிச்சில் எறிந்து
விளையாடும்

              0

உள்ளே இன்னும்
எட்டி நோக்கினேன்

கூடவே பிறந்த
வினாக்களை
முதுகில் சுமந்து
வாயோரம்
சூன்யம் நுரைக்கும்
எல்லாம்

              0

நோக்கினேன்

மூலைகள் வெடித்துப் பெருகி
இன்னும் இன்னும் மூலைகள்

மூலைகளில்
ஒன்றன் நிழலை
ஒன்று உடுத்துக் கொண்டு
தம்மை விரித்துப்
படுத்துக் கொள்ளும்

அங்கங்கே
மறதி வாய்பிளக்கும்
உள்ளிருந்து
மரணம் தன்
கொடுக்கால் குறிபார்க்கும்

குருட்டு வெளிச்சம் எட்டாமல்
உள்ளின் உள்ளிருந்த
அவன்
தன் மௌன வெளியை
விலக்கிப் பிரித்து
ஒருகணம்
நோக்கினான்

முறுவலிட்டு
மௌன வெளியால்
மூடிக்கொண்டு
மீண்டும்
உள் மறைந்தான்

நான்
கதவைச் சாத்தி
வெளியேறினேன்

No comments: