கதவு திறந்து
உள் நோக்கினேன்
சித்திரங்கள்
ஒன்றனுள் ஒன்று
நகங்களால் கிறுக்கின
கதவை
இறுகப் பற்றி நின்றேன்
பேச்சுக்கள்
நொறுங்கிப்
பரற்குவியல்
பூரணத்துவத்தைத்
தோண்டியெடுக்க
வெட்டிய பள்ளங்கள்
எங்கும்
சித்திரங்களின் சிரிப்பு
சிரிப்பு
சிவந்து கனலும் அலறல்
தம் ஒலங்களில்
தம் நிறம் முழுவதும்
கரைத்துப் பாய்ச்சும்
ஆயிரம் வருஷங்களைச்
சாலையாய் நீட்டச் சொல்லி
ஓரடி வைத்தவுடன்
உடல் தெறித்து விழும்
'சூரியன் உறங்கிற்றோ?'
கிள்ளிப் பார்க்கும்
சூரியன் உதிர்த்த ப்ரக்ஞை
கணங்களாய் ஊரும்
நாற்புறமும்
உருவம் வேண்டி
கணங்களிடம் இரக்கும்
ஓவியங்கள்
சூழவும் உரசி உரசிக்
காற்றைச் சிராய்த்துப்
புண்ணாக்கும் சில ...
ஒத்தி ஒத்திக்
கண்ணீர் தடவி
ஆற்றவரும்
சில ..
மூலவெறி சுமந்து
நரம்பு விறைத்தெழச்
சுவர்களைச் சுரண்டிச்
சதைமணக்க
மூச்சயிர்க்கும்
சில ...
குருட்டு வெளிச்சத்தில் கூசிக்
கண்மூடிக் கொண்டு
உள்கதவை நோக்கி
விரல் சுட்டி
நம்பிக்கையோடு
அமர்ந்திருக்கும்
மிகச்சில
0
எல்லாம்
நெரிசலில்
நெரிசலை
மறந்து போகும்
அனுபவங்களைத்
தமதாக்க
ஒன்றையொன்று
தழுவிச்
சண்டையிடும்
சண்டை
சப்தங்கள் கீறிய வடு
உயிர்த்து அலறச்
சண்டை
பின்
தம் எல்லையின்மையில்
கொளுத்தி
ஒன்றன்மேலொன்று
பந்தங்கள்
எறிந்து விளையாடும்
அவற்றின்
பேதைக் குழந்தைகளோ
உப்புப் பனிச்சில் எறிந்து
விளையாடும்
0
உள்ளே இன்னும்
எட்டி நோக்கினேன்
கூடவே பிறந்த
வினாக்களை
முதுகில் சுமந்து
வாயோரம்
சூன்யம் நுரைக்கும்
எல்லாம்
0
நோக்கினேன்
மூலைகள் வெடித்துப் பெருகி
இன்னும் இன்னும் மூலைகள்
மூலைகளில்
ஒன்றன் நிழலை
ஒன்று உடுத்துக் கொண்டு
தம்மை விரித்துப்
படுத்துக் கொள்ளும்
அங்கங்கே
மறதி வாய்பிளக்கும்
உள்ளிருந்து
மரணம் தன்
கொடுக்கால் குறிபார்க்கும்
குருட்டு வெளிச்சம் எட்டாமல்
உள்ளின் உள்ளிருந்த
அவன்
தன் மௌன வெளியை
விலக்கிப் பிரித்து
ஒருகணம்
நோக்கினான்
முறுவலிட்டு
மௌன வெளியால்
மூடிக்கொண்டு
மீண்டும்
உள் மறைந்தான்
நான்
கதவைச் சாத்தி
வெளியேறினேன்
Sunday, December 30, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment