Sunday, November 11, 2007

எதன் முடிவிலும் . . .

நினைக்க நினைக்க
நா ஊறிற்று
பறிக்கப் போகையில்

ஓ, அதற்கே எவ்வளவு முயற்சி!
இரண்டு சிறகுகள்
இங்கே கொண்டுவந்துவிட,
யார்யாரோ கொடுத்த
கண்களைக்கொண்டு வழிதேடி,
இடையிடையே காணாமல்போய்,
என்னைநானே
கண்டுபிடித்துக் கொண்டு
கடைசியில்
மங்கலான ஒருவழியில்
நடந்தோ நீந்தியோ சென்று சேர்ந்து
முண்டுமுண்டாய்ச்
சுளுக்கிக்கொண்டு நிற்கும்
அந்த மரத்தில் என்னை ஏற்றி
அதை பறிக்கச் செய்து

ஏறிய நானும்
கீழ்நின்ற நானும்
நாவில் வைத்தபோது
குடலைக் கசக்கும் கசப்பு

கீழே எறிந்துவிட்டு
மறுபடி நினைத்தால்
நினைக்க நினைக்க
நா ஊறுகிறது.

No comments: