Wednesday, February 6, 2008

மறையத் தவறிய

தோன்றி மறைந்து தோன்றி
திரும்ப மறையத் தவறியது
அந்தக் கற்பனை

அதன்படி :
எரிகொள்ளிகளின் நடுவே
துடித்து நெளிந்தது உலகம்
நெளிந்த புழுக்கள் சொல்லின,
"இது நாளைய காட்சி" என்று

எண்ணத் தொலையாத
கோணப் புதர்களில்
சிக்கிச் சிதறுவது வாழ்வு என்றார்
நீண்ட அங்கியும் தாடியுமாக ஒருவர்
அங்கியும் தாடியும் தெரிவித்தன
"இது நேற்றைய உண்மை" என்று

எரிகொள்ளிகள்
கருக்கிருட்டில் எழுந்து ஆடிச்
சுட்டிக் காட்டிய
கோணப் புதர்களில் நுழைந்தே
எல்லாரும் போயாக வேண்டும்.
'எல்லாரும்' என்பது சொல்லிற்று
'எனினும் சட்டம் எதுவுமில்லை
கோணங்களின் முந்தைய, பிந்தைய
இன்மைகளின்
வழியாகவும் போகலாம்.'

ஆகாயம்
தன் ஊசிமுனைக் கால்களால்
நிகழ்கணத்தின்மீது
நின்று தடுமாறிற்று

ஊசிமுனைக் கால்கள்
சொன்னதாவது:
'முன்-பின்களுக்கு நடுவில்
ஊன்றி நிற்கக் கிடைப்பது
மறையத் தவறிய கற்பனை'

No comments: