Saturday, February 9, 2008

பொதுப் பார்வை

பிரயாணங்களின் ஊடே
தயங்கித் தயங்கி ஒட்டிக்கொண்டது

என்னைப் பார்க்கத் தெரிந்துகொண்டிருந்தது

எனது உடைமைகளைக்
கணக்கிட்டு வைத்திருந்தது

என்கால் தரையில் ஊன்றும்போது
தெம்பு கொண்டது

விளையாட்டுப் போட்டிகளுக்கு
என்னை அழைத்துச் சென்றது;
நூலகங்களுக்கும்

என் ரத்த அழுத்தம்
சமன்பட்டிருப்பதை
சோதித்தறிந்து
அமைதிகொண்டது

என் கவனிப்பு வட்டத்திற்குள்
நிரந்தரமாக வந்துகொண்டேயிருந்தது

விவாதங்களில்
எதிர்ப்பட்டோரை
வெற்றிகொண்டு புளகித்து
என்னைக் கடைக்கணித்தது

எனது தனிப்பார்வைகளை
நான் ஒளித்துவைத்திருக்கும்
இடங்கள் தேடி
ரகசியம் செய்தது

அப்படி எதுவும் இல்லை
என்ற
என் உண்மையைச்
சந்தேகித்தது

பொதுப்பார்வை

No comments: