சுத்தமாய் ஒருநாளை
ஒதுக்கி
நிறுத்திவைப்போம்
எதற்கென்றுமில்லாமல்
அது
பரபரப்பதும்
பரிதவிப்பதும்
பார்த்திருப்போம்
ஜரிகையில் எழுதிய
தன்பெயர்
அழிய அழிய
அது பொருமிப்
பெருமூச்சு விடக்கூடும்
தன் நீள்சதுர உருவம்
மங்கமங்க
நழுவப்
பெரிதும் துடிக்கலாம்
வானம் தொட்டு நிமிர்ந்தும்
மண்ணில் குறுகி நெளிந்தும்
தன் மின் சக்தியால்
எங்கும் துழாவக்கூடும்
ஒதுங்கி நிற்போம்
தன்னுள்
செறிந்து பறக்கும்
துகள்களுள்
பதுங்கி மறைந்துள்ள
சப்தங்களை வருடிச்
சரி பார்க்கலாம்
உலகின் முழுச்சாயையும்
தேமல்போல் படர்ந்து
தினவு தருவதை
உணர்ந்தோ உணராமலோ
தன்னைத் தேய்த்துவிட்டுக் கொள்ளலாம்
சிரித்துக் கண்ணீர் சிந்தித்
திமிறி
தப்ப முடியாதெனக் கண்டு
கடைசியில்
அது
வாய்திறந்து
பேசி,
பேச்சின் வாசனையில் கரைந்து
தப்பிவிடக் கூடும்
அதுவரை
சுத்தமாய் ஒரு நாளை
ஒதுக்கி
நிறுத்திவைப்போம்
எதற்கென்றுமில்லாமல்
Sunday, December 30, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment