Sunday, November 11, 2007

உலா

நிழல்
தொட்டு எழுப்பிவிட்டுப்
போனது

ஒருநாளும்
படுக்கையில்
பின்னம் விடாமல்
வாரிச்சுருட்டி
முழுமையாய் எழுந்ததில்லை.
இன்றும் தான்.

வாடைக்காற்று
வழித்துப்போகும்
தேய்மானம்
பொருட்படுத்தாமல்
நடைபாதை நெருப்பு
தொற்றித் தொடர
ஊர்க்கோடி வரை
உலாவப் போகவேண்டும்

ஊர்க்கோடி
ஒருநாள் இருந்த இடத்தில்
இன்னொருநாள்
இருப்பதில்லை

போய்ச்சேரும்போது
பெரும்பாலும்
இருட்டிவிடும்

இருளின் பேச்சுமட்டும்
மயக்கமாய்
கனத்துக் கேட்கும்
அதில் மின்மினிகளின்
பாதையன்றி
வேறொன்றும் தெரியாது

திரும்பிப் பார்த்தால்
ஊர்
புகைவிட்டுக் கொண்டு
சின்னதாய்த் தெரியும்

என்
பிணங்கள் அங்கே
பொறுமையிழந்து
கூக்குரலிடுவது கேட்கும்...

திரும்பத்தான் வேண்டும்
மனசில்லாவிடினும்

திரும்பி,
கடைவாயில்
மரணம் அதுக்கி
மழுப்பிச் சிரித்து
உறங்கித் திரிய வேண்டும்
மறுபடி நிழல்வந்து
தொட்டு எழுப்பும் வரை

No comments: