குழப்பம் என்றான் நண்பன்
எது அவனைச் சூழ்ந்து நெருங்கியிருக்கிறதோ
அதனை
ஊடுருவியபோது
உண்மைதான் அவன்கூற்று
என்று தெரிந்தது
அவன் வீட்டவர் வேறுமாதிரி.
பளபளவென்று நிச்சயங்களைத் துலக்கி
மாலை விளக்கொளியில்
மின்னச் செய்கிறார்கள்
இருள் கலவாத வெளிச்சம் பேசுகிறார்கள்
நூல் பிடித்து அமைத்த
மனசின் சந்திகளில்
உரக்கச் சந்தித்துத்
தழுவிச் சிரித்து மகிழ்கிறார்கள்
பார்க்கக் கண் தேவையில்லை,
பார்ப்பதற்கும் இல்லை
என்றிருக்கும் ஒன்றை,
மாலைச் சலனங்களிடையே
சிறு ஒலி எழுப்பித் திரியப் பார்த்ததாக
இமைகளைக் கவித்துக்கொண்டு
பரவசத்துடன் சொல்கிறார்கள்
சந்தையிலிருந்து திரும்பும் கால்களில்
சாமர்த்தியம்
வழிநிழலில் அமர்ந்து
முனைகள் சந்திக்க
வளையம் வரையும் கைகளில்
லாகவம்
புள்ளியிலிருந்து புள்ளிக்கு
இடைக்கணத்தில்
அபார துல்லியம்
யாரும் யாரும்
எதுவும் எதுவும்
தெளிவே அவர்களுக்கு;
குழப்பம் என்கிறான் நண்பன்
குழப்பம் என்கிறான்
மாலையின்
இறுகலுக்கும் இளகலுக்கும்
நடுவில் நின்றபடி
Wednesday, January 9, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment