Wednesday, January 9, 2008

மாலை - நிலவிரிவு

வலித்தது என்று
மாலையைக் கீழே இறக்கிவிட்டிருக்கிறோம்

வெறித்த
பாலைப் பொழுதைப்
போர்த்துக்கொண்டு கிடக்கிறோம்

செம்மண் பரப்பை
குத்துச்செடி விரிவை
பாறைக் கும்பலை
மேலிட்டு
மூடிப் பரப்பிக்கொண்டு கிடக்கிறோம்

அருகே
எட்டித் தொடும் எளிமையுடன்
கடல்நடுத் தனிமையை
இணைத்துக் கிடத்தியிருக்கிறோம்

சாவு சொன்னதை
ஸ்வரப் படுத்திப்
படுக்கை வசமாக
விரிய விட்டிருக்கிறோம்

அடிவான உராய்வில்
முகம்பதியக்
கிடப்பதில் திளைத்து
நில விரிவாகி,
சுற்றுமுற்றுமாகி,
இருக்கிறோம்.

No comments: